அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் போராளியாபராவை சேர்ந்தவர் மானிக் அலி. திருமணமான அவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அவருடைய மனைவி வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் இரண்டு முறை அவரை பிரிந்து சென்றார். ஆனால் தனது மகளின் நலனுக்காக மனைவியை தன்னுடன் அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். ஆனாலும் அவர் மனம் மாறாததால் இருவரும் சட்டப்படி பிரிவது என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.
இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று நினைத்த மாணிக் அலி, 40 லிட்டர் பால் வாங்கி வந்து அதனை பக்கெட்டில் ஊற்றி பின்னர் அந்த பாலில் குளித்தார். அப்போது அவர் எனக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று பலமுறை உற்சாகமாக கூறினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு பக்கம் இப்படி இருக்க, இன்னொரு பக்கம் விவாகரத்தை சுற்றுலா சென்று கொண்டாடியுள்ளனர் பெண்கள். கேரளாவில் விவாகரத்து பெற்ற பெண்கள் குழுவாக சேர்ந்து சுற்றுலா சென்று விவாகரத்தை கொண்டாடியுள்ளனர்.
கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரபியா அபி விவாகரத்து பெற்ற பெண்களுக்கான குழு ஒன்றை உருவாக்கி சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். மாநில முழுவதிலும் இருந்த பல இளம் பெண்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஒரே மகிழ்ச்சியாக பொழுதை கழித்துள்ளனர்.
தங்களுக்கு விவாகரத்தான காரணம் பற்றி மற்ற பெண்கள், தோழிகளிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர். விவாகரத்தான பெண்களுக்கு வேடிக்கை பயணமாகவும் மற்றும் புதிய நம்பிக்கை உறவுகளை உருவாக்கும் பயணமாகவும் இது அமைந்ததாக அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

