ஸ்டார்ட்.. ஆக்ஷன்.
அத்தியாயம் 37
இயக்குனர். ஏ.பி.நாகராஜன்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் ஏற்று நடிக்க வேண்டிய சண்முகசுந்தரம் என்கின்ற நாதஸ்வர வித்வானின் வேடம் அவருக்கு ஒரு சவாலாக இருந்தது!
நாதம் வாசிப்பதில் பிழை செய்தால்.. ஆடியன்ஸும்.. இசை ஞானம் உள்ளவர்களும்.. கேலி செய்வார்கள் என்பதால் சிவாஜி கணேசன் அவர்கள் பல நாதஸ்வர கச்சேரிகளுக்குச் சென்றார்!
நாதஸ்வரத்தை வாசிக்கும் போது..
கன்ன சதைகள் குலுங்கும் விதங்கள்! தொண்டை குழியில் தெரியும் அதிர்வுகள்!..கை விரல்களின் அசைவுகள்!… எல்லாவற்றையும் பாடமாக மனதில் பதிவு செய்து கேமரா முன் நடித்தார்!
ஒரு உண்மை நாதஸ்வரக் கலைஞனின் வாசிப்பை திரையில் மக்கள் கண்டு பிரமித்தார்கள்..
எம்.பி.என் சேதுராமன் – எம்.பி.என்.பொன்னுசாமி நாதஸ்வர.. இசை…பொழிந்தார்கள்..!
அதைப் போலவே தவில் வித்வானாக நடித்த டி.எஸ்.பாலையா அவர்களும் அதற்காக பல நாட்கள் பயிற்சி எடுத்தார்..! திருமதி பத்மினியின் பரத நாட்டியம் அற்புதமாக இருந்தது…!நாகேஷ் அவர்களும் … மனோரமா அவர்களும்.. ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மக்களை பெரிதும் கவர்ந்தன!..
‘தில்லானா மோகனாம்பாள்’ மகத்தான வெள்ளி விழா படமாக அமைந்தது!
எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது வெளி நாட்டில் இருந்து வந்த கலைஞர்களுக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தையே பார்க்க ஏற்பாடு செய்தார் !..
அந்த அளவுக்கு தமிழ் மண்ணின் கலாச்சாரப் பெருமையை ‘தில்லானா மோகனாம்பாள்’ பிரதிபலித்தது!
அந்தப் படத்திற்குப் பிறகு சிவாஜி கணேசன் அவர்களின் கால்ஷீட் கிடைக்காததால் அவருக்காக காத்திராமல் ஏ.பி.நாகராஜன் அவர்கள் தயாரித்து இயக்கிய படம் ‘வா ராஜா வா’
பிரபல நடிகர்கள் …. பிரம்மாண்டமான செலவுகள் என்று படங்களை எடுத்துக் கொண்டிருந்த ஏ.பி.நாகராஜன் அவர்கள் ஒரு புது முக சிறுவனை கதாநாயகனாக்கி …மாமல்லபுர கோயில் பின்னணியில் இயக்கிய மாறுபட்ட படம்!
ஏழு பழ மொழிகள் வாழ்வில்.. உண்மையாக நிகழ்வதை படத்தின் பிரதான கலமாக வித்தியாசமாக தந்தார்!..
பிரமாண்டமான வெற்றியை பெற்ற படம் ‘வா ராஜா வா’..
அதற்குப் பிறகு அவர் ‘திருமலை தென்குமரி’ என்று ஊர் ஊராகச் சென்று வழிபடும் பக்தர்களின் படத்தை எடுத்தார்!..
அந்தப் படமும் வித்தியாசமான இன்னொரு வெற்றி காவியமாக அமைந்தது…
அந்தப் படத்திற்குப் பிறகு..
‘திருமலை தெய்வம்’… ‘அகத்தியர்’.. என்று தன்னுடைய தனித்துவமான படங்களை தந்த அவர்…
இயக்கிய படம்.. தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய சாதனையைப் படைத்தது!
வெள்ளித் திரையை மிக அகலமான ஒரு திரையாக மாற்றி ஒரு புதிய திரைப்பட டெக்னிக்கு வழி காட்டிய அந்தப் படம்?
– இயக்குநர் நித்தியானந்தம்

