மாங்கல்ய பலம் அருளும் திருமங்கலக்குடி – அறந்தாங்கி சங்கர்
திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.
சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற இந்தச் சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 38வது சிவத்தலமாகும்.
காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட நலம் என்று சொல்லப்படுகிறது . இங்குள்ள இறைவன் பிராண நாதேஸ்வரர்; இறைவி மங்களநாயகி அல்லது மங்களாம்பிகை.
இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். வழக்கமாக லிங்கத்தின் பாணம் ஆவுடையார் (பீடம்) உயரத்தை விட சிறியதாக இருக்கும். ஆனால் இக்கோயிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
அம்மன் பெயர் மங்களாம்பிகை (அ) மங்களநாயகி. அம்மன் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார்.
பிரகாரத்தில் சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன.

நவகிரகங்கள் சிவனை வழிபட்ட தலமென்பதால் நவகிரகங்களுக்கு இங்கு சன்னிதி இல்லை. இக்கோவிலில் வழிப்பட்ட பின்னரே இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள சூரியன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது முறைப்படுத்தப்பட்டுள்ளது.
கோயிலின் வாயிற்கோபுரத்தின் இருபுறமும் விநாயகர், சண்முகர் உள்ளனர். கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் மங்களாம்பிகை சன்னதி.
மண்டபத்தில் நடராஜர்-சிவகாமி, ஈசானமூர்த்தி, சூரியன், பைரவர், விசாலாட்சி, சந்திரன் உள்ளனர். உள் சுற்றில் மகாதேவலிங்கம், சிவலிங்கம், ருத்ரலிங்கம், சங்கரலிங்கம், நீலலோஹிதலிங்கம், ஈசான லிங்கம், விஜயலிங்கம், பீமலிங்கம், தேவதேவலிங்கம், பவோத்பவலிங்கம், கபாலீச லிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன.
தொடர்ந்து விநாயகர், மெய்கண்டார், அரதத்தர், சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர், வள்ளி தெய்வானையுடன் சண்முகர், விநாயகர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். சோமாஸ்கந்தருக்கு தனி சன்னதி உள்ளது. கருவறையைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், விஷ்ணு துர்க்கை, காவேரியம்மன் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலின் வெளிச்சுற்றில் அகஸ்தீஸ்வரர் சன்னதி உள்ளது.
முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் அலைவாணர், அரசனுக்குத் தெரியாமல் தான் கண்டெடுத்த சுயம்புலிங்கத்திற்குக் கோயில் கட்டினார். செய்தியறிந்து வெகுண்ட அரசன் அமைச்சரைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான்.

அலைவாணர் தனது மரணத்துக்குப் பின் தனது உடலை திருமங்கலங்குடிக்கு எடுத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டிருந்ததால் அவரது ஆட்கள் அவ்வண்ணமே எடுத்துச் சென்றனர். அமைச்சரின் மனைவி, மங்களாம்பிகையிடம் சென்று தன் கணவனை உயிரோடு திருப்பித்தர வேண்டுமென மன்றாடி வேண்டினாள். அம்மன் அருளால் திருமங்கலங்குடிக்குள் அமைச்சரது உடல் எடுத்துவரப்பட்டதும் அவர் உயிர் பெற்று எழுந்தார்.
இந்நிகழ்வின் காரணமாகவே கோவிலின் சுவாமி பிராணநாதேசுவரர் என்றும் அம்மன் மங்கல பாக்கியமளித்ததால் மங்களாம்பிகை எனவும் பெயர் கொண்டுள்ளனர் என்பது தொன் நம்பிக்கை.
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருக்கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருத்தென்குரங்காடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய தலங்களாகும்.

பிராணநாதேசுவரர் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ள திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. கும்பகோணம் – கதிராமங்கலம் – மயிலாடுதுறை சாலையில் திருமங்கலக்குடி உள்ளதால் ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகள் மூலம் இக்கோவிலுக்குச் செல்லலாம். ஆடுதுறையிலிருந்து சுமார் 2.5 கிமீ தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து சுமார் 13 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கோவிலின் அஞ்சல் முகவரி: ஸ்ரீ பிராணநாதேசுவரர் கோயில், திருமங்கலக்குடி-612102. ஆலயத்தை அழிக்க வேண்டிய
தொலைபேசி எண்: 91-435-2470480.
அறந்தாங்கி சங்கர்

