Monday, April 6, 2026
Homeஆன்மீகம்நலமெல்லாம் நல்கும் நரசிங்கபுரம் லக்ஷ்மி நரசிம்மசுவாமி!

நலமெல்லாம் நல்கும் நரசிங்கபுரம் லக்ஷ்மி நரசிம்மசுவாமி!

நலமெல்லாம் நல்கும் நரசிங்கபுரம் லக்ஷ்மிநரசிம்மசுவாமி

அறந்தாங்கி சங்கர்

மகாவிஷ்ணுவாகிய அந்த மூலப் பரம்பொருள் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமான் எடுத்த அவதாரங்களில் குறுகிய காலத்திலேயே எடுத்த அவதாரம் நரசிம்ம சுவாமி ஆவார் .

எல்லா பெருமாள் கோவில்களிலும் நரசிம்ம சாமிக்கு தனி சன்னதி அமைந்திருக்கும் அகோபிலம் என்ற தளத்தில் நம்ம நரசிம்மர்கள் அமர்ந்து வரக்கூடிய மொத்த கோடிகளுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்கள் …

இது தவிர பல்வேறு திருக்கோவில்களில் நரசிம்ம சுவாமி கோவில் கொண்டு அருள் புரிவதை நாம் பார்க்கலாம் ..

அப்படிப்பட்ட ஒரு அற்புதமான திருத்தலம் தான் திருவள்ளூர் அருகில் அமைந்துள்ள நரசிங்கபுரம் திருத்தலமாகும்..

 இங்கு மூலவர் லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி என்ற பெயரிலும் உற்சவர் பிரஹலாத வரதர் என்ற பெயரிலும் தாயார்  மரகதவல்லி தாயார் பெயரிலும் வழங்கப்படுகிறார்கள்…

இந்த திருத்தலத்தைப் பற்றி கீழே விரிவாக காண்போம்…

ஸ்தல வரலாறு:

மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங் களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. ஆனால், பக்தன் கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் நரசிம்ம அவதாரம் ஒன்றுதான்.

அதேபோன்று, மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் மிகவும் புகழ்பெற்றவை. 

ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் நாமாக்களே பஞ்ச நாமாக்கள்.

நரசிம்மர் என்றவுடன், சட்டென்று அஹோபிலம்தான் பலரின் ஞாபகத்துக்கு வரும். 

அங்கு ‘நவ நரசிம்மர்’ கோயில்கள் உள்ளன. 

ஹைதராபாத்துக்கு அருகில் யாதகிரி கோட்டா, வட்டபல்லா, மட்டப்பள்ளி போன்ற தலங்களும், சிம்மாசலம், கத்ரி, மங்களகிரி, பெஞ்சல கோணா ஆகிய ஆந்திர மாநிலத்தின் இன்னும்பிற தலங்களும், கர்நாடகத்தில் சென்னபட்னா, தமிழகத்தில் சோளிங்கபுரம், பழைய சீவரம், அந்திலி, சிந்தலவாடி, மங்கைமடம், திருக்குரவளூர், ஆவணியாபுரம், நாமக்கல், சிங்கப்பெருமாள்கோவில், பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்ககிரி, காட்டழகிய சிங்கர்கோவில், நரசிங்கபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள கத்தாழம்பட்டு (சிங்கிரி கோயில்) ஆகிய திருத்தலங்களிலும் புகழ்பெற்ற நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன.

 இவற்றில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் அதிகம் பிரபலமாகாத, ஆனால் பக்தர்கள் தரிசித்துச் சிலிர்க்கும் ஓர் உன்னதத் திருத்தலம். நரசிம்மர் பெயரையே தாங்கி நிற்கும் ஒப்பற்ற திருத்தலம் இது.

பிரகலாதர் எனும் உற்சவர் சிலையை உருவாக்கிய விதம் பற்றிய ஆவணம் கூறும் ஒரு பழைய கல்வெட்டு இந்த ஊரின் வரலாற்றினையும் சற்று விரிவாக உரைக்கிறது. 

சந்திரகிரி இராஜ்ஜியத்தின், ஜெயங்கொண்ட சோழமண்டல எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றின் அருகில்,தெற்குப் பகுதியில் நரசநாயகர்புரம் எனும் ஒரு பழைய கிராமம் அமைந்துள்ளது. அவ்வூரில் உள்ள கோயிலில் கடவுளின் அவதாரம் எனப் பெயரிடப்பட்டு புரந்தர நரசிங்க பெருமாள் எனும் மூலவர் வீற்றிருந்தார் என மேலும் அக்கல்வெட்டு உரைக்கிறது. 

அந்த நரச நாயகர்புரம் பின் பேச்சு வழக்கில் நரசிங்கபுரம் என பெயர் மாற்றம் ஆனது.

இந்த க்ஷேத்ரம் 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் ஏழரை அடி உயரத்தில் மகாலக்ஷ்மியை இடது துடை மீதமர்த்தி சாந்த ஸ்வரூபியாக அருள்பாலிக்கிறார். 

மகாவிஷ்ணுவின், பத்து அவதாரங்களில் உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களில் தீயவர்களை அழிக்கும் இடம், நேரம் போன்றவை அந்தந்த அவதாரத்திலிருந்த பெருமாள் எடுத்த முடிவு. 

ஆனால் நரசிம்ம அவதாரம் மட்டும், பிரகலாதன், எப்போது, எந்த இடத்தில் தன்னை அழைப்பானோ என்று எண்ணி, அனைத்துலகிலும் பரவி இருந்து, கூப்பிட்டவுடன், கூப்பிட்ட இடத்தில் தோன்றி தீமையை அழிக்கக் காத்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. 

இவர் லட்சுமி நரசிம்மனாய் வீற்றிருந்து அருள்புரியும் தலமே திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். 

இவரிடம் வேண்டுதல் வைத்தால், நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நிறைவேற்றி விடுவார் என்கின்றனர். இங்கு அஷ்டலட்சுமிகளும் அருள்புரிவது விசேஷம்.

கோயில் சிறப்புகள்:

•மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி இருப்பது சிறப்பு.

•சாதாரணமாக, லக்ஷ்மி நரசிம்மர் கோயில் களில், லக்ஷ்மி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந் திருப்பார். ஆனால், இங்கே லக்ஷ்மி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். ஆகையால், நரசிம்மரைத் தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லக்ஷ்மி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும்.

•1400 வருடங்கள் பழமையான கோயிலாகும் , சுமார் 11 நூற்றாண்டை சார்ந்த கோயிலாக கருதப்படுகிறது .

•கருடாழ்வார் 4 அடி உயரத்தில் கழுத்தில் 16 நாகங்களை அணிகலன்களாக அணிந்துள்ளார் ,

•பிரகாரத்தில் ஸ்ரீ மரகதவல்லி தனிச் சன்னதி கொண்டிருக்கிறார். இவர் அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். அடுத்துத் தனிச் சன்னதியில் ஆண்டாள் நாச்சியார் உள்ளார். மகாமண்டபத்தில் ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் திருக்காட்சி நல்குகிறார்கள்.

•மரகதவள்ளி தாயார் ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு

•ஸ்ரீ நரசிம்ம பிரானின் சிறப்பு என்ன? கண்கள் இரண்டு இருந்தாலும் ஒரு சமயத்தில் நம்மால் ஒரு விஷயத்தை மட்டுமே காணமுடிகிறது. கோபம், சிரிப்பு, சந்தோஷம் என எந்த உணர்ச்சியாக இருந்தாலும் ஒன்றில் மட்டுமே நம்மால் வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் நரசிம்ம பிரான் ஒரே நேரத்தில் இரு வேறுபட்ட செயல்களைச் செய்கிறார் எப்படி? தன்னால் இரண்யனைக் கோபமாகப் பார்க்கிறார், பிரகலாதனைக் குளிர்ந்த பார்வையில் நோக்குகிறார். இப்படி கோபத்திலும் குளிர்ந்து இருக்கும் அபூர்வத்தை வெளிபடுத்தம் பெருமாளைத் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகிலுள்ள நரசிங்க புறத்தில் காணலாம்.

•இங்கு போக மூர்த்தியாக 7 முனிவருக்கு காட்சி தந்தார்.

ஆனி பிரமோற்ஸவம் 10 நாட்கள், நரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், கருட சேவை, சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்), ஸ்ரீஜெயந்தி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி.

நரசிங்கபுரம் பெருமாள் கோவில்

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோயில், நரசிங்கபுரம், 

திருவள்ளூர்- மாவட்டத்தில் அமைந்துள்ளது..

ஆலயத்தை தொடர்பு கொள்ள அழைக்க  வேண்டிய தொலைபேசி எண் 9442585638..

சென்ட்ரல் – ஆவடி – கடம்பத்தூரில் இறங்கி பஸ் அல்லது – ஆட்டோ மூலமாக பேரம்பாக்கம் வழியாக நரசிங்கபுரம் செல்லலாம் அல்லது பூந்தமல்லி வழியாக அரக்கோணம் மார்க்கம் சென்று பேரம்பாக்கத்தை அடுத்த ஊராக நரசிங்கபுரம் அமைந்திருக்கிறது.. பூவிருந்தவல்லிருந்து மாநகர பேருந்து தடம் எண் 591E திருக்கோவில் வரை செல்கிறது.

ஒருமுறை நலம் பல நல்கும் நரசிம்ம பெருமாளை தரிசனம் செய்து வாழ்வில் நலமும் வளமும் பெறலாமே! சென்று வாருங்கள் .

ஓம் நமோ நாராயணாய…

அறந்தாங்கி சங்கர்

9080488624/9444160161

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments