இந்தியாவின் முன்னணி சட்ட நிறுவனங்களில் (Law firms) பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு, இந்த ஆண்டு மற்ற கார்ப்பரேட் துறைகளை விட மிக அதிக அளவிலான சம்பள உயர்வு கிடைக்கவுள்ளதாக ‘வஹுரா’ (Vahura) என்ற சட்ட ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகச் சட்ட சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 7% முதல் 10% வரையிலான சம்பள உயர்வை விட, இந்த 2026-ஆம் ஆண்டில் வழக்கறிஞர்களுக்கான ஊதிய உயர்வு 10% முதல் 20% வரை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்றும், சிறப்பான பங்களிப்பை வழங்கும் திறமையாளர்களுக்கு 15% முதல் 20% வரை ஊதிய உயர்வுடன் கூடிய கூடுதல் போனஸ் மற்றும் பதவி உயர்வுகளும் காத்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் தொடர்பான ஒப்பந்த ஆய்வுகள், நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் (M&A) சார்ந்த சட்டப் பணிகள் மற்றும் பெருநிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் (IPO) போன்ற பல்வேறு முக்கிய சட்ட ஆலோசனைகளில் கடந்த நிதியாண்டில் சட்ட நிறுவனங்கள் தீவிரமாகப் பங்காற்றியதே இந்த ஊதியப் பெருக்கத்திற்குக் முதன்மைக் காரணமாகும்.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் கடந்த 2026 நிதியாண்டில் மட்டும் தங்களின் சட்ட விவகாரங்களுக்காக ₹69,000 கோடி முதல் ₹72,000 கோடி வரை செலவிட்டுள்ளதாகவும் (முந்தைய ஆண்டில் இது ₹60,000 கோடியாக இருந்தது), சந்தையில் திறமையான வழக்கறிஞர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே கைத்தான் அண்ட் கோ (Khaitan & Co.), எகனாமிக் லா பிராக்டிஸ் (ELP), ஜேஎஸ்ஏ (JSA), ட்ரிலீகல் (Trilegal) போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்கள் அசோசியேட் முதல் பார்ட்னர் லெவல் வரை இந்த அதிரடி போனஸ் மற்றும் ஊதிய உயர்வுகளை வழங்கி வருவதாகவும் வஹுரா நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் அங்கிதா மாலிக் தெரிவித்துள்ளார்.

