வளர்ப்பு நாய் பொதுமக்களை அல்லது மற்றவர்களைத் தாக்கினால், அந்தச் சம்பவத்திற்கு அதன் உரிமையாளரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த எல்ஹாம் ரெசா என்ற பெண், இந்திரா நகரிலுள்ள தனது தோழி லலிதா வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த வளர்ப்பு நாய் திடீரென பாய்ந்து அவரது முகத்தில் கடித்துக் குதறியதாகக் கூறி, உரிமையாளர்கள் கார்த்திக் ஸ்ரீவஸ்தவா மற்றும் லலிதா ஆகியோரின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம் என போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி லலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, “நாயைக் கட்டவிழ்த்து விடுவது மிகவும் பொறுப்பற்ற செயல்” என்றும், “அவ்வாறு அவிழ்த்து விடப்படும் நாய் யாரையாவது தாக்கினால் அதற்கு அதன் உரிமையாளர்தான் முழுப் பொறுப்பு” என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
மேலும், இந்தத் தீர்ப்பு அனைத்து வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், லலிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்து அவர் வழக்கைச் சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டது.

