தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இனி கைபேசி ஸ்பீக்கர் மூலம் சத்தமாகச் செய்திகள், பாடல்கள் அல்லது வீடியோக்கள் கேட்கத் தடை விதித்துப் போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேருந்துகளில் பயணிகள் உரத்த குரலில் ஸ்பீக்கரைப் பயன்படுத்துவதால் சக பயணிகளுக்குப் பெரும் அசௌகரியமும் இடையூறும் ஏற்படுவதாகப் பலதரப்பிலிருந்தும் தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது கைபேசியில் ஒலிவடிவ உள்ளடக்கங்களைக் கேட்க விரும்புபவர்கள் கட்டாயமாக இயர்போன் (Earphone) அல்லது ஹெட்ஃபோனை (Headphone) மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய நடைமுறை குறித்துப் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை உடனடியாக ஒட்டுமாறு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் போக்குவரத்துத் துறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

