தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக ரூ.755 கோடிக்கும் அதிகமான மதிப்பில் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தப் பிரம்மாண்ட டெண்டரை பிரபல நகைக்கடை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டத்திற்காக சுமார் 4.41 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் அன்றைய சந்தை விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம் மற்றும் பிற கட்டணங்களுக்கு வெறும் 1 பைசா மட்டுமே மேற்கோள் காட்டியதன் மூலம் ஜோய் அலுக்காஸ் நிறுவனம் குறைந்தபட்ச ஏலதாரராக (L1 Bidder) தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.755 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் அந்த நிறுவனத்துக்கு செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வ பணி ஆணை வழங்கப்பட்டுவிட்டதா? 1 பைசா மட்டுமே கட்டணமாகக் குறிப்பிட்டு அந்நிறுவனம் உண்மையிலேயே L1 bidder ஆனதா? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகியுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, ‘ரூ.755 கோடி டெண்டரை ஜோய் ஆலுக்காஸ் கைப்பற்றியதா?’ என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் மற்றும் வணிக வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வ டெண்டர் முடிவு மற்றும் பணி ஆணை வெளியான பின்னரே இந்தத் தகவலின் முழுமையான உண்மை தெளிவாகும்.

