பண்ணைபுரத்தானின் பயணம் - மு.பழனிவாசன்

ஐஐடி மெட்ராஸ் தன்னுடைய அடுத்த அத்தியாமாக ஒரு புதுவிஷயத்தைக் கையிலெடுத்திக்கிறது. ஆம் ! மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் பெயரில் இசை குறித்த ஆராய்ச்சி…! அது இசை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட உள்ளது.
”இசையில் என்னய்யா ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது?” என ஒரு சிலர் எள்ளி நகைக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களில் முதல்வகையினர் இளையராஜா குறித்து காழ்ப்புணர்வில் கருகிப்போவோர்,
இரண்டாம் வகையினர் இசையின் மேன்மையை உணராதவர்களாக இருப்பர்.
இந்த பிரபஞ்சம் ஒலியால் மற்றும் ஒளியாய் விளங்குவது. நாதத்தின் தலைவனாக கடவுள் சிவனே விளங்குகிறான் என்பது சனாதன தர்மம்.
இறைவனைக் கண்டு அவனுள் கரைந்துபோகச்செய்வது இசை ஒன்றே.
சில நூற்றாண்டுகளுக்கும் முன்னர் சமயக்குரவர் நால்வரில் திருஞான சம்பந்தரும், அப்பரும் இணைந்து திறக்கவே முடியாத திருமறைக்காடு சிவன் கோவில் வாசலில் நின்று, சிவபெருமான பணிந்தேத்தி, பாடித்துதித்து, அதன் மூலமே கதவுகளைத் திறந்தனர் என்பது வரலாறு.
இன்றும் பல கோசாலைகளில் ஜீவிக்கக்கூடிய பசுக்கள், அங்கு ஒலிபரப்பப்படும் திவ்யமான இசைகேட்டவன்ணம் ஆரோக்கியமாக விளங்குவதுடன், அதிகமான பால் தருகின்றன என்பது கண்கூடான உண்மை. மஹாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் தன் பால்ய வயதில் புல்லாங்குழலை வாசித்துதானே பசுக்களை மேய்த்தான்!
சங்கீத உலகின் மும்மூர்த்திகள் இசையால்தானே இறைவனை தரிசித்தார்கள் !
செடிகளும் மரங்களும் கூட இசையை ரசிப்பதாகவும், அவை கேட்கும் இசைகேற்ப அவற்றின் அசைவுகளும், குணாதிஒசியங்களும் இருப்பதாக மேல்நாட்டு விஞ்ஞானிகள் மெய்ப்பித்திருக்கிறார்களே!
மானிடப்பிறப்பின் பிறப்பு முதல் இறப்பு வரை நம் மூச்சுக்காற்றுக்கு இணையாக நம்முடன் பயணிப்பது இசைதானே!
தீராத கடும் நோய்களிலிருந்து இசையால் நிவாரணம் கிட்டுவதை நவீன மருத்துவ உலகம் ஒப்புகொண்டுள்ளதே !
”இந்துமத திருக்கோயில்களில் இசைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போல வேறெந்த மதமும் அளித்திருக்கிறதா ?”என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். இறைவனுக்கு இசை ஒவ்வாதது என்று கூறும் மதங்களும் உண்டு என்பதே உண்மை.
இப்படி மொழியற்ற ஒலியான இசையின் மூலம் மானிட இனம் மட்டுமின்றி புழுப்பூச்சிகளும்கூட அடைந்து கொண்டிருக்கும் பயன்கள் சொல்லி மாளாது. ”இசை” என்பது உயிரினங்களுக்கான ஒருவித “விசை”யாகும்.
இந்திய இசையானது, கர்நாடக சங்கீதம், தமிழிசை, ஹிந்துஸ்தானி, பாங்கரா போன்ற பல வடிவங்களை உடையது. இவை அனைத்தும் 7 (ஏழு) ஸ்வரங்களுக்குள் அடக்கம். அந்த ஸ்வரங்களெனும் அடித்தளத்தின் மீதுதான் எண்ணிலடங்கா இராகங்கள் பல பரிணாமங்களைத் தோற்றுவிக்கிறது.
இப்படிப்பட்ட இசையை பிறருக்கு கற்ப்பித்தல் செய்யும் பணியினை மட்டுமின்றி அதனை ஆய்வுக்குட்படுத்தி அதன் சூட்சமங்களைக் கண்டறிந்து அதன் துல்லியத்தை உலகிற்கு வழங்க ”ஐஐடி மெட்ராஸ்”முன்னெடுத்திருப்பது ஆகச்சிறந்த செயலாகும்.
இசை மேதைகள் என்றாலே பீத்தோவான், மொஸார்ட், பால்மரியா போன்ற மேதைகளை முன்னிறுத்தி, தூக்கிப்பிடித்துக் கொண்டாடுவது மேற்கத்திய உலகம். ஆனால், அதில் மாபெரும் விற்பன்னராக விளங்கும் இசைமேதை ”திரு. இளையராஜா” அவர்கள் மூலம் இந்த ஆராய்ச்சியினை மேற்கொள்ளவிருப்பது இந்தியத் திரையுலகம், குறிப்பாக தமிழ்த்திரையுலகம் கொண்டாடித்தீர்க்க வேண்டிய தருணமிது.
இது அவரது அறிவின் பரிபூரணத்தைக் காட்டுகிறது. அவரது இப்பணியில் இன்னும் பல புதிய இசைக்கருவிகளையும் வடிவமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. திரு.இளையராஜா அவர்கள் ஆஸ்கர் விருதினை வென்றதில்லை. ஆனால் என்ன?
பாமர மக்கள் முதல் மேட்டுக்குடி மேதாவிகள் வரை அனைவர் மனதையும் தன்பால் ஈர்ப்பதில் வென்றிருக்கிறாரே !
தமிழகத்தின் எளிமையான கிராமமான பண்ணைபுரத்திலிருந்து புறப்பட்டு, திரையுலகில் சாதித்து, இன்று அகில உலகமும் வியக்கும் வண்ணம் சர்வதேச புகழ்பெற்ற ஐஐடி மெட்ராஸ் எனப்படும் உயரிய நிறுவனத்தில் தன் பெயரால் இசைக்கான ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்தப்பட்டு, அதற்கு தானே தலைமை தாங்கி நடத்தவுள்ளார். இது சாதி, மதம், இனம், மொழி பேதங்களைக் கடந்து மக்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. தமிழகம் ஒருதலைசிறந்த மேதையை தன்னகத்தே கொண்டுள்ளது. அவரை கெளரவப்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை. ஒவ்வொரு இந்தியனின் பெருமை.
இந்த ஆராய்ச்சிப் பணியில் அவர் புதிய சிகரங்கள் பலவற்றை எட்டுவார் என்பது திண்ணம். உலகம் உற்றுநோக்கி வியக்கும். பள்ளிப்படிப்பைத் தாண்டாத திரு.இளையராஜா அவர்கள் ஒரு மனிதனாக தன்னை மென்மேலும் பக்குவப்படுத்திக் கொண்டு, அல்லனவற்றை நீக்கி, நல்லனவற்றைக் கடைபிடித்து, தன் துறையில் ஆழந்த கவனம் செலுத்தி, அதில் மேம்பட்டு, இன்று அப்துல்கலாம் போன்ற கல்வியில் சிறந்த மேதைகள் உலாவிய ஐஐடி மெட்ராஸில் கால் பதித்துள்ளார். அங்கு அவர் மேற்கொள்ளவிருக்கும் பணியில் நிச்சயம் அழுத்தமான தடம் பதிப்பார்.
ஆராய்ச்சி மையத்துவக்கவிழா நிகழ்வில், ”தாய் மூகாம்பிகை” என்னும் திரைப்படத்தில் தான் எழுதி இசையமைத்த “ஜனனி…ஜனனி” என்னும் பாடலின் தொடக்கத்தில் வரும் “தொகையறா”வான சமஸ்க்ருத ஸ்லோகத்தை, இசைப்பின்னணி ஏதுமின்றி, எழுதிவைத்துக்கொண்டு படிக்காமல், மனப்பாடமாக பாடியது மிகச்சிறந்த முத்தாய்ப்பு.
“தமிழனென்று சொல்லடா… தலை நிமிர்ந்து நில்லடா…” என்னும் வரிகள் திரு.இளையராஜா அவர்களால் மெய்ப்படுகிறது.
வளர்க ஐஐடி மெட்ராஸ்…
தொடர்க பண்ணைபுரத்தானின் இசைப்பணி…