சைவ உணவை வலியுறுத்தி ஆண்டு தோறும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுக்க உலக சைவ உணவாளர் தினம் ( World Vegetarian Day) அனுசரிக்கப்படுகிறது.
அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் நம் சமயங்கள் எல்லாம் உணர்த்தும் அடிப்படை உண்மை. மற்ற உயிர்களை கொன்று சாப்பிடுவது அதற்கு எதிரானது என்பதால் அசைவம் சாப்பிடுவதை சமயங்கள் எதிர்க்கின்றன என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.மனிதனை தவிர மற்ற விலங்குகள் அவற்றுக்கு தேவையான உணவை தாங்களே உற்பத்தி செய்துக் கூடிய திறமை இல்லாதவை. அவை பிற உயிர்களை கொன்று சாப்பிடுவதில் தப்பு இல்லை.
ஆனால் மனிதன் விதை விதைத்து தானே உணவை உற்பத்தி செய்யும் திறமைப்படைத்தவனாக இருக்கிறான். அதனால், அவன் பிற உயிர்களை கொன்று சாப்பிட வேண்டிய அவசியமில்லை. தாவர உணவுகளை சாப்பிடுவதால் மலச்சிக்கல் அதிகம் இல்லை. மேலும் அவை குடலை வலிமையாக்குகின்றன. மாமிசம் உண்பதால் குடல் வலிமையை இழந்து உடல் உள் உறுப்புகள் சோம்பல் நிலையை அடைகின்றன. சிக்கல்களை கொண்ட அசைவ உணவுகளை தவிர்ப்பது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

மேலும் விலங்குகள் சுகாதாரமின்றி வசிப்பவை. அவற்றின் உடலில் கிருமிகள் அதிகம். அந்த விதத்தில் அந்தக் கிருமிகள் நம்மையும் தாக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், இறந்த மீன்கள், கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியில் வேகமாக கிருமிகள் தொற்றும்.மீன், முட்டையில் இருக்கும் சத்து எல்லாம் கீரைகள், முளை கட்டிய தானியங்கள், கேரட் போன்றவற்றில் இருக்கின்றன. மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது என்று நினைப்பவர்கள் கேரட், கீரைகளை சாப்பிடலாம் இவை மீனை விட சத்தானவை. மேலும், மீன் விலையோடு ஒப்பிடும் போது இவற்றின் விலை குறைவுதான்.
அசைவ உண்வுகள் ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. உடலில் கொழுப்பையும் அதிகரிக்கிறது. இது இதய நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.அசைவ உணவு சாப்பிடும் சிங்கம், புலி போன்றவற்றின் உடலில் பற்களின் அமைப்பு, அவற்றின் உடலில் சுரக்கும் திரவம், ஜீரண உறுப்புகள் அனைத்தும் அசைவ உணவை சாப்பிடுவதற்கு ஏற்ப இயற்கையாக அமைந்துள்ளன.
ஆனால் மனிதனின் பற்கள் அமைப்பு, உமிழ்நீர், ஜீரண உறுப்புகளின் அமைப்பு சைவ உணவு சாப்பிடுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இறைச்சி சாப்பிட்டால் மனிதர்களுக்கு அதிக நேரமாவதை அனுபவ பூர்வமாக பலர் உணர்ந்திருப்பார்கள். மேலும், மலச்சிக்கல் ஏற்படுவதையும் காணலாம். அதே சமயம் சைவ உணவை சாப்பிடுவது எளிது. ஜீரணமாவது எளிது, மூளையின் செயல்பாடும் அதிகரிக்கும்.