அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமானம் ஒன்று டேக் ஆப் ஆன சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏடிசிக்கு “மேடே” அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் இயக்கியுள்ளனர். அவருக்கு உதவியாக கிளைவ் குண்டர் என்ற முதல் நிலை விமானி இருந்துள்ளார் கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8200 மணி நேரத்திற்கும் அதிகமான விமான அனுபவம் உள்ளது. மேலும், துணை விமானி கிளைவ் குண்டருக்கு 1100 மணி நேர விமான அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் அகமதாபாத்தில் இருந்து இந்திய நேரப்படி பிற்பகல் 1:39 மணிக்கு (UTC 08:09) ஓடுபாதை 23-ல் இருந்து புறப்பட்டதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் (ATC) தெரிவித்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏடிசிக்கு “மேடே” அழைப்பு விடுத்தது. சரியாக விமானம் புறப்பட்ட 90வது நொடியில், அதாவது டேக் ஆப் செய்து விமானம் புறப்பட்ட பின் 90வது நொடியில் MayDay கால் வந்துள்ளது.

பொதுவாக விமானத்தில் பிரச்சனை ஏற்படும் போது அதிலும்.. பெரிய பிரச்சனை ஏற்படும் போதே MayDay கால் கொடுக்கப்படும். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த விமான நொடிக்கு நொடி கவனிக்கப்பட்டு உதவி வழங்கப்படும்.
போயிங் 787-8 டிரீம்லைனர் ரக விமானமான இதில், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். விபத்து குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், அப்பகுதியில் இருந்து வெளியான காட்சிகளில் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது. விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா 171 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்கு மதியம் 1:10 மணிக்கு செல்லக்கூடிய விமானமாகும்.
விபத்து நடந்த இடத்திற்கு ஏழு தீயணைப்பு வண்டிகள் உட்பட அவசர சேவைகள் விரைந்துள்ளன. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், விமானத்தில் இருந்தவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இது பற்றி விசாரிக்க விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அகமதாபாத் செல்கிறார்.விபத்தால் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 25 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பயணித்த 242 பேரில் 110 பேர் இறந்ததாகவும் சில தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாக வில்லை.

