குடும்பத்தில் சண்டை இல்லை, ஆபீஸில் பிரச்சனை இல்லை, பணமும் பிரச்சனை இல்லை, உடல் நிலையும் சரியாக இருக்கிறது, எல்லாம் சரியாக இருக்கும் சூழ்நிலையில் மனசு ஏதோ பதட்டமாக இருக்கிறதா?
எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் இப்படி பதட்டமாக உணர்வது நம்மில் பலருக்கும் ஏற்படும் ஒரு குழப்பமான அனுபவம்தான். இதற்குப் பின்னால் சில அறிவியல் மற்றும் உளவியல் காரணங்கள் இருக்கின்றன.
அதாவது நமக்கு ஒரு ஆபத்து வந்தால் அதிலிருந்து தப்பிக்கவும் அல்லது எதிர்த்து போராடவும் நம் உடல் நம்மை தயார்படுத்தும். அது போல சில நேரங்களில் அமைதியாக இருக்கும் பொழுதும் அந்த சிஸ்டம் நம்மை ஆபத்து இருப்பது போல உணரச் செய்து விடும். முறையற்ற தூக்கம், அதிகப்படியான காபி குடிப்பது அல்லது சர்க்கரை உட்கொள்வது, ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இதற்கு காரணம்.
நமக்கே தெரியாமல் நாம் வெளிப்படையாக யோசிக்காத பல விஷயங்கள் நம் பின்பக்கத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். அதாவது ஒரு போனின் பேக்ரவுண்டில் பல app-கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது போலவே, நமக்கு தெரியாமல் நமக்குள் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும். அது வேலை பிரச்சினையாக இருக்கலாம், குடும்ப பிரச்சினையாக இருக்கலாம் அல்லது வேறு எந்த ஒரு பிரச்சனை கவலையாக இருந்தாலும், அது ஓடிக்கொண்டே இருக்கும் அதன் அழுத்தம் தான் காரணம் இல்லாத பதட்டமாக மாறுகிறது.
இதற்கு காரணம் என்னவென்றால் அதிக நேரம் சமூக ஊடகங்களை பார்த்துக் கொண்டிருப்பது, நெகட்டிவான செய்திகளை படிப்பது, மற்றவருடன் நம்மை ஒப்பிட்டு பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தேவைக்கேற்ப ஓய்வு எடுக்காமல் இருப்பது, உள்ளிட்ட பலவிதமான விஷயங்கள் நமது நரம்பு மண்டலங்களை தாக்கும் பொழுது, இது போன்ற பதட்டம் ஏற்படுகின்றது. அமைதியான சூழல்களிலும் ஓய்வெடுக்க முடியாமல் பதட்டமாக தோன்றுகிறது.
அப்படி உணர்ந்தால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டு, ஐந்து நிமிடம் மெதுவாக மூச்சை இழுத்து விடுவது, சிறிது தூரம் நடப்பது, பிடித்தவர்களிடம் பேசுவது (நேரிலோ அல்லது மொபைல் போனிலோ) சிறிது நேரம் உரையாடுவது, பாடல் கேட்பது உள்ளிட்ட விஷயங்களை செய்து வந்தால் நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்படுவது குறையும்.

