சபரிமலையில் மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம், கடந்த 23ம் தேதி காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது.
ஓமல்லூர், ரான்னி, பெருநாடு வழியாக இன்று மதியம் இந்த ஊர்வலம் பம்பையை அடைந்தது. பம்பை கணபதி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த தங்க அங்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.25 மணி அளவில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தங்க அங்கியுடன் காட்சியளிக்கும் ஐயப்பனை காண ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.
இதையடுத்து சபரிமலையில் நாளை மதியம் 12.30- 1.00மணிக்கு இடையே சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜையை காண திரளான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

