Home Uncategorized சனிப்பிரதோஷம்.. சிவபெருமானை வழிபட தவறாதீர்கள்..!!!

சனிப்பிரதோஷம்.. சிவபெருமானை வழிபட தவறாதீர்கள்..!!!

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் திரயோதசி நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் உள்ள காலம் பிரதோஷ காலம் ஆகும். காரணம் அன்று தான் எம்பெருமான் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்தருளினார் என்று சிவபுராணம் கூறுகின்றது.

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும். மற்ற பிரதோஷ நாட்களை விட மஹா பிரதோஷம் எனப்படும் சனிப்பிரதோஷ நாள் மிகவும் விசேஷமானது.

சனிப்பிரதோஷ நாளில் நந்தி தேவரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகலவிதமான துன்பங்களும் நம்மை விட்டு ஓடிப்போகும். ஏகாதசி தினத்தன்று ஆலகாலத்தை உண்ட எம்பெருமான், மறுநாளான துவாதசி தினம் முழுவதும் மயக்க நிலையில் இருந்தார்.

பின்னர் மூன்றாம் நாளான திரயோதசி நாளில் பகலும், இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் மயக்க நிலையில் இருந்து விழித்தெழுந்து, சூலத்தை சுழற்றி உடுக்கை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது.

இதைக் கண்ட தேவர்கள், முனிவர்கள் உட்பட அனைவரும் எம்பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்தார்கள். இப்படி எம்பெருமான் அனைவருக்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலம் என்று கூறப்படுகிறது. பிரணவத்தின் முழு வடிவம் நந்தி தேவர்.

மேலும் எம்பெருமான் உருவாக்கிய நான்மறைகளையும் முதன்முதலில் நந்தியம் பெருமானுக்கு தான் உபதேசித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனால் தான் பிரதோஷ காலத்தில் முதல் மரியாதையும், பூஜையும் நந்தியம் பெருமானுக்கு செய்யப்படுகிறது.

நாள் முழுவதும் விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து மாலையில் சிவனை தரிசனம் செய்யுங்கள். கோவிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே சிவனை மனதார நினைத்து தரிசனம் செய்யுங்கள்.

Exit mobile version