சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய ஒரு நோய் என்றால் அது சிக்குன்குனியாதான். சாதாரண காய்ச்சல் என நினைத்து இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் பல உயிரிழப்புகள் நேர்ந்தது. அதன் பின்னர்தான் இதன் தீவிரத்தை உணர்ந்து நாடு முழுவதும் இதற்கான தடுப்பூசிகளும், மருந்துகளும் விநியோகிப்பட்டது.
கொசுக்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சல் சாதாரண காய்ச்சல் போலத்தான் தோன்றும் ஆனால் இதன் பாதிப்புகள் காய்ச்சலை விட பலமடங்கு அதிகமாய் இருக்கும். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் மரணம் வரை ஏற்படுத்தக்கூடியது.
இப்போது மீண்டும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அனுப்பிய சுற்றறிக்கையில் ,சிக்குன்குனியா பாதிப்பு இருப்பதால், உரிய கண்காணிப்புடன் கூடிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை, அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள், ஆய்வகங்களில் உரிய நேரத்தில் சிக்குன் குனியா பரிசோதனைகளை மேற்கொண்டு நோய் பரவலை தடுக்க வேண்டும்.டெங்கு அல்லது சிக் குன்குனியாவுக்கு சிகிச்சை தர தனி வார்டு அமைக்க வேண்டும். பாதிப்பை கண்டறியும் எலிசா பரிசோதனைக்கு தேவையான உபகரணங்களை இருப்பில் வைக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்
அறிகுறிகள் :
தலைவலி, கடுமையான காய்ச்சல், மயக்கம், வாந்தி, உடல் குளிர்ச்சி, முக்கியமாக உடம்பின் எல்லா மூட்டுகளிலும் கடுமையான வலி, வீக்கம் தோல் சிவந்து போதல், அரிப்பு ஆகியவை முக்கியமாக அறிகுறிகள், மூன்று நாட்கள் இருக்கும் மூட்டுவலியும் கடும் காய்ச்சலும் ஆளைக் கொன்றுவிடும். இதன் பாதிப்பு மூன்று முதல் ஆறுமாதம் வரை கூட இருக்கலாம். நீண்ட நாளைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை, இரத்தக்கொதிப்பு, அல்சர், மூட்டுவலி, இதய, நுரையீரல், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நோய்க்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிர் இழக்க வாய்ப்புண்டு. இது ஆட்கொல்லி நோயல்ல என்றாலும் ஆள்முடக்கி நோய்.
சிக்குன்குனியா வராமல் தடுக்க கொசுக்களை ஒழிப்பதே ஒரே தீர்வு. அதற்கு வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கொசு வருவதற்குக் காரணமான பொருட்களை அப்புறப்படுத்துங்கள். மூலைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். கழிவுப் பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள்.
சிக்குன்குனியா நோயைக் குணப்படுத்துவதற்கோ அல்லது நோய் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கோ இதுவரை நேரடி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

