முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சமும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் ₹3 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என அறிவிப்பு.
இளம் பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் (வயது 24) புதியதலைமுறை தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவில் பணியாற்றி வந்தார். தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த இவர், ஏற்கனவே விகடன் மாணவ பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
நேற்று (22-10-2022 ) இரவு 10.30 மணிக்கு பணி முடித்து சென்னை ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் அருகே நடந்து சென்ற போது, மூடப்படாமல் இருந்த மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்திருக்கிறார். அரை மணி நேரத்திற்கும் மேல் எவராலும் கண்டுக்கொள்ளப்படாமல் தவித்த முத்துகிருஷ்ணனை அந்த வழியாகச் சென்ற காவலர் ஒருவர் மீட்டுள்ளார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (23-10-2022) பிற்பகலில் அவர் உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ₹2 லட்சமும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் ₹3 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

