செயல்படுத்தப்படாத கிரெடிட் கார்டில் இருந்து நிலுவைத் தொகை என்ற பெயரில் பணத்தைப் பிடித்து, வட்டி ஈட்டுவதைக் “ரகசிய சதித்திட்டம்” எனக் கடுமையாகச் சாடியுள்ள ஹரியானா மாவட்ட நுகர்வோர் ஆணையம், பாதிக்கப்பட்ட நபருக்கு ₹1.26 லட்சத்தை வட்டியுடன் திரும்ப அளிப்பதுடன் ₹11,000 இழப்பீடு வழங்கிட மாநில வங்கி (SBI) மற்றும் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் யமுனாநகரைச் சேர்ந்த ரூபிந்தர் சிங் என்பவருக்கு எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு ஒன்றை வழங்கிய நிலையில், அவர் அந்த கார்டை ஒருபோதும் ஆக்டிவேட் செய்யவோ அல்லது கூகுள் பே, பேடிஎம் போன்ற எந்த ஆன்லைன் தளத்துடனும் இணைக்கவோ இல்லை. இருப்பினும், 2022-ஆம் ஆண்டு முதல் அவரது சேமிப்புக் கணக்கிலிருந்து நிலுவைத் தொகை என்ற பெயரில் பணத்தைப் பிடித்த வங்கி, மும்பையில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட ₹59,000-க்கும் அதிகமான இரு பரிவர்த்தனைகளுக்காகத் தொடர்ந்து தொகையை கழித்து வந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரை வங்கி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் நுகர்வோர் ஆணையத்தை அணுகினார். வழக்கை விசாரித்த ஆணையம், கார்டு ஆக்டிவேட் செய்யப்பட்டது மற்றும் ஓடிபி/தானியங்கி ஆணை வழங்கப்பட்டதற்கான எவ்வித ஆவணச் சான்றுகளையும் வங்கித் தரப்பால் சமர்ப்பிக்க முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், வாடிக்கையாளரின் கணக்கில் போதிய பணம் இருந்தபோதிலும் முழுத் தொகையையும் கழிக்காமல், குறைந்தபட்சத் தொகையை மட்டும் கழித்துவிட்டு மாதந்தோறும் வட்டி வசூலித்து லாபம் ஈட்டுவது சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனத் தீர்ப்பளித்து அபராதம் விதித்தது.
