மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்பதாகவும், ஆன்மிக அரசாக திமுக திகழ்வதற்கு இது ஓர் உதாரணம் என்றும் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறினார்.
மாமன்னர் ராஜராஜ சோழன் 1037-வது சதயவிழா தஞ்சையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் தலைமையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியிருப்பதாவது:-
மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். நான் ஏற்கனவே கூறியபடி ஆன்மீக அரசாக தி.மு.க. திகழ்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
அரசு விழாவாக கொண்டாடப்படுவதின் மூலம் இனி அனைத்து தரப்பினரும் சதய விழாவை கொண்டாடுவர். உலகம் முழுக்க புகழ் கிடைக்கும். மாமன்னன் ராஜராஜ சோழனால் தான் நமக்கு திருமுறை பாடல்கள் கிடைத்துள்ளது.
12 திருமுறைகளில் உள்ள 18 ஆயிரம் பாடல்களை செப்பேடு, ஓலைச்சுவடிகளில் பதிவிட்டு வருகிறோம். தற்போது கை பிரதிகளாக அச்சிடப்பட்டு வருகிறது. மேலும் செல்போனில் செயலி மூலமும் வெளியிடும் பணி நடந்து வருகிறது என மேலும் அவர் தெரிவித்தார்.

