சென்னை ஆலந்தூரில் 7 வயது மகளை கழுத்தறுத்துக்கொன்ற தந்தையை கைது செய்ய கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது.
அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தனது 7 வயது மகள் ஸ்டெபியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூரில் உள்ள தனியார் விடுதியில் மகளைக் கொன்று தந்தையும் தற்கொலைக்கு முயற்சி செய்த தந்தையை கைது செய்யக்கோரி பெரம்பலூர் மங்கலம் பகுதியில் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்கொலை தகவல் அறிந்த பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடியபடி ரத்த வெள்ளத்தில் கிடந்த சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை ஸ்டெபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்துள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தற்கொலைக்கு முயன்ற சதீஷ்குமார், சென்னை அயனாவரத்தில் வசித்து வந்ததுடன் ஸ்பீக்கர் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ரெபேக்கா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகின்றது.
எனவே தனது 7 வயது மகள் ஸ்டெஃபி ரோஸை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மனைவி ரெபேக்கா அவரது கணவர் சதீஷ்குமார் மீது சென்னை ஓட்டேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இது குறித்து சில நாட்களுக்கு முன்பு மனைவி ரெபேக்கா வீட்டிற்கு சென்ற சதீஷ்குமார் அவரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சதீஷ்குமார் தொடர்பு கொண்ட போலீசார் ஓட்டேரி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் தனது குழந்தையை தன்னிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஆலந்தூரில் உள்ள தங்கும் விடுதிக்கு மகள் ஸ்டெபியை அழைத்து தங்க வைத்து சதீஷ்குமார் மகள் ஸ்டெபியின் முகத்தில் தலையணை வைத்து அமுக்கியத்துடன், கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தந்தை சதீஷ்குமாரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். சிகிச்சை முடிந்த பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இருவரின் குடும்ப சண்டை விவகாரத்தில் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையம், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

