சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை என்ற புதிய துறை தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக ‘பி.எஸ். மெடிக்கல் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங்’ என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதை, ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காக்னிசன்ட் நிறுவன இணை நிறுவனா் லட்சுமி நாராயணன், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
சென்னை ஐஐடி.யில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள துறை மூலம் பி.எஸ். மருத்துவ அறிவியல்-தொழில்நுட்பம் (நான்காண்டு படிப்பு), மருத்துவா்களுக்கான முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள், அறிவியல்-பொறியியல் பட்டதாரிகளுக்கான ஆராய்ச்சி படிப்பு ஆகியவை வழங்கப்படவுள்ளன.
நாட்டில் முதல் முறையாக பி.எஸ். மருத்துவ அறிவியல் – பொறியியல் பாடப்பிரிவு தற்போது சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் படித்த மாணவா்கள் ஜூலை மாதம் நடைபெறும் நுழைவுத் தேர்வெழுதி பி.எஸ். படிப்பில் சேரலாம்.

