சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்களின் தொடர் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 31-ந்தேதி மெக்கானிக்கல் பிரிவில் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வந்த சச்சின் ஜெயின் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மாணவரின் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஐ.ஐ.டி. நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவரின் தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஈமெயில் வாயிலாகவும், நேரடியாகவும் கருத்துக்களை கேட்டறிந்தது. தற்போது 250 முதல் 300 பக்க அறிக்கையை ஐஐடி நிர்வாகத்திடம் வழங்கி உள்ளது.
அதில் மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகளை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இந்த அறிக்கை குறித்த முழு விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

