சினேகா, வெங்கட் பிரபு நடிப்பில் அருணாச்சலம் வைத்யநாதன் தயாரித்து இயக்கும் குழந்தைகளுக்கான திரைப்படமான ‘ஷாட் பூட் த்ரீ’ வேகமாக வளர்ந்து வருகிறது
பிரசன்னா-சினேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் நிபுணன், மோகன்லால் நடித்த பெருச்சாழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், சீதக்காதி இணை தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன், அவரது அடுத்த படத்தை தற்போது மும்முரமாக தயாரித்து இயக்கி வருகிறார்.
ஷாட் பூட் த்ரீ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்தும், குழந்தைகளின் மனதில் வைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் பூவையார் (மாஸ்டர்), பிரபல பாடகி பிரணிதி, நடனக் கலைஞர் கைலாஷ் ஹீத் மற்றும் புதுமுகம் வேதாந்த் ஆகியோர் மைய வேடங்களில் நடிக்கின்றனர்.
நான்கு குழந்தைகளை சுற்றிய கதையான ஷாட் பூட் த்ரீ-யின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறை கொண்டாட்டமாக இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
படத்தைப் பற்றி அருணாச்சலம் வைத்யநாதன் கூறுகையில், “குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும். அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம். குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும்,” என்றார்.

