தமிழக சட்டப்பேரவையில் நேற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.
இம்மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலையில் அமர்ந்து மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேறியது. ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்புக்கு இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
பல்வேறு கட்சியினரின் விவாதத்துக்குப்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

