மீண்டும் கொரோனா 3வது அலை அதிகம் பரவும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் உணவங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
கோவையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பால், மருந்து, காய்கறி கடைகளை தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டு இயங்க வேண்டும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்களுக்கு மட்டும் அனுமதி.
மொத்த மார்க்கெட்டுகளில் சில்லறை விற்பனைக்கு அனுமதி இல்லை. 50 சதவீத கடைகள் மற்றும் சுழற்சி அடிப்படையில் செயல்படும்.
கேரளாவில் இருந்து கோவைக்கு வருபவர்கள் இரண்டு கொரொனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கபட்ட RTPCR சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் RTPCR சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, காந்திபுரம் 5,6,7 வது தெருக்கள், 100 அடி சாலை,ராம்மூர்த்தி சாலை, சாரமேடு சாலை உட்பட மக்கள் அதிகம் கூடும் பகிதிகளில் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

