Friday, February 6, 2026
HomeUncategorizedகரூர் காகித ஆலையில் பரபரப்பு; மேலாளர்கள் அதிரடி சஸ்பெண்ட்!

கரூர் காகித ஆலையில் பரபரப்பு; மேலாளர்கள் அதிரடி சஸ்பெண்ட்!

கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் தரமற்ற நிலக்கரி வாங்கிய வகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 4 ஆண்டுகளில் சுமார் 400 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து டி.என்.பி.எல் ஆலையின் முதன்மை பொது மேலாளர் பாலசுப்பிரமணியம், தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், பாலசுப்பிரமணியம் இன்று பணி ஓய்வு பெறும் நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமான கரூர் டி.என்.பி.எல் காகித ஆலை கடந்த 1983ல் தொடங்கப்பட்டு, இதன் உற்பத்தி பிரிவு 1986 முதல் செயல்பட்டு வருகிறது.

காகிதக் கூழில் இருந்து தரமான பேப்பர் தயாரிக்கப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3,000 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஆலைக்கு தேவைப்படும் நிலக்கரி வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக கொள்முதல் செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரியில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தரமற்ற நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்கியது. இதனால் ஏற்பட்ட இழப்பீடு என சுமார் ரூ. 400 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வருகிறது.

இதில் கடந்த ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத் நேரடி பார்வையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான லண்டன் சுப்பிரமணி என்ற அதிகாரி மூலம் இந்த நிலக்கரி கொள்முதல் நடந்ததாகவும், இதில் எடப்பாடி பழனிசாமியின் மகன் பிரபு மற்றும் அவரது அக்கா மகன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆசியாவிலேயே முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் டி.என்.பி.எல் ஆலையில் இதுபோன்ற முறைகேடு நடந்ததும், உயர் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்படுவதும் இதுவே முதன் முறை என கூறப்படுகிறது.

டி.என்.பி.எல் காகித ஆலைக்கு வெளிநாட்டிலிருந்து டாலர் பரிவர்த்தனை மூலம் டன் கணக்கில் நிலக்கரி கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது குறித்து நிர்வாக மேலாண்மை இயக்குனர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments