திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது.
கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை ‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கியவரும், ‘கோமாளி’, ‘கைதி’, ‘விஐபி 2’, ‘இமைக்கா நொடிகள்’, மற்றும் ‘கீ’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், குறும்படங்களையும் யூ டியூப் வீடியோக்களையும் உருவாக்கியவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதியுள்ளார்.
இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் ‘கொட்டுக்காளி’ தமிழ் படத்தில் நடித்தவருமான அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருப்பவர் பாக்யராஜ் சார்தான். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்” என்றார்.

