Wednesday, February 4, 2026
HomeUncategorizedநாட்டுக்காக பணியாற்றுபவர்களை கன்னியத்துடன் மதிக்கவேண்டும் - பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை

நாட்டுக்காக பணியாற்றுபவர்களை கன்னியத்துடன் மதிக்கவேண்டும் – பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் முக்கிய அதிகாரிகள் நாட்டு மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குறித்த பேட்டிகள், விவரங்கள் உள்ளிட்டவை குறித்த செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டிருப்பது இதோ:

* இந்திய ஆயுதப்படையினரின் தியாகம் , சாதனை, நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிட மீடியாக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஆதரவு அளித்து வருகிறது. தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை, நாட்டு மக்கள் புரிந்து கொள்வதில் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

* ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின், ஒரு பகுதியாக ஆயுதப் படைகளின் மூத்த அதிகாரிகள், தங்களின் தலைமைப்பண்பு காரணமாக பொது மக்களின் கவனத்திற்கு வருகின்றனர். தற்போது அதிகாரிகளின் பணிகளை தாண்டி, அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத்தினர் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. * மீடியாவை சேர்ந்தவர்களின் அவர்களின் வீடுகளுக்கு செல்வதோடு, அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முயல்வதும், அலுவலக பணிகளை சாராத விஷயங்களை செய்தியாக்க முயற்சி செய்கின்றனர் என தெரிய வருகிறது.

* இதுபோன்ற நடவடிக்கை சரியில்லாதது. வீரர்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பு, கண்ணியம், மற்றும் தனியுரிமையை சமரசம் செய்யும் வகையில் உள்ளது. மூத்த அதிகாரிகள், முக்கிய பணியை செய்யும்போது, அவர்களின் குடும்பத்தினர் தனிப்பட்ட குடிமக்களாக நீடிக்கின்றனர். அவர்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும்.

* எனவே, மீடியா குழுவினர் கீழ்கண்ட விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

1. பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகள் மற்றும் குடும்பத்தினரை, தனிப்பட்ட செய்திகள், பேட்டிகளுக்காக அவர்களின் வீடுகளுக்கு செல்வதையும், தொடர்பு கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இதில், அவர்களாக விருப்பப்பட்டால் அல்லது முறையான அனுமதியுடன் செல்பவர்களுக்கு விதிவிலக்கு.

2. வீட்டு முகவரி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் அல்லது தேவையில்லாத தகவல்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இவை பொது நலனுக்கு எதிரானது.

3. ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள், அதன் தொழில்முறை மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் குறித்து மீடியாக்கள் கவனம் செலுத்தலாம். தனிப்பட்ட யூகங்களை தவிர்க்கலாம்.

4. தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ நடவடிக்கை காலகட்டங்களில், தனியுரிமை மற்றும் நடவடிக்கை ரகசியம் குறித்த எல்லைகளை மதித்து நடக்க வேண்டும்.

*மீடியாவுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு அமைச்சகம் உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், பொறுப்பாக நடந்து கொள்வதுடன், நாட்டிற்காக பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை கண்ணியத்தை மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments