நாமக்கல்லில் ரூ. 20 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாததால் மூன்று பெண் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம் அருகே வேப்பங்கவுண்டன்புதூரை சேர்ந்த கோவிந்தராஜ்க்கு பாரதி என்ற மனைவியும், ஒரு மகன் மூன்று மகள்கள் இருந்தனர். அதிகாலையில் மகள்கள் பிரதிக்ஷா ஸ்ரீ(10), ரித்திகா ஸ்ரீ (7), தேவா ஸ்ரீ(6) ஆகியோரை கொடுவாளால் தலையை துண்டித்து கோவிந்தராஜ் கொலை செய்ததாக விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.
கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்த கோவிந்தராஜ் சம்பவத்தன்று இரவு தனது மனைவியும் ஒரு மகனும் தனி அறையில் உறங்கிய பிறகு, கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு இன்னொரு அறையில் தனது மூன்று மகள்களையும் கொன்றுள்ளார். பிறகு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பதறிய மனைவி மாற்று சாவியை கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த குழந்தைகளை பார்த்து கதறி துடித்த பாரதியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இவர் வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க முடியாததால், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தனது மூன்று குழந்தைகளையும் கொன்று கோவிந்தராஜன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

