மாறி வரும் நகர்ப்புற கலாச்சாரத்தில் செல்ல பிராணிகளுக்கு அன்பு காட்டும் சமூகம் உருவாகி வருகிறது. இன்றும் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் பாராமுகம் காட்டுவதை காணமுடியும். அதேசமயத்தில் தனது எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் ரத்த சொந்தங்கள் போல் துடிக்கும் இந்த ஜீவனை விட வேறு உயிரினங்களை காணமுடியாது. அதனால் தான் பல வீடுகளில் பெட்ரூம் வரை முன்அனுமதி பெறாமல் வந்து செல்லும் உரிமையை பெற்ற உயிரினமாக மாறியுள்ளது.
உலகில் சுமார் 1500க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த நாய்கள் உள்ளன. ஆனால் இதில் 300க்கும் மேற்பட்ட நாய்கள் மட்டுமே மனித சமூகத்தோடு ஒன்றி வசிப்பவை. அனைத்து வகை நாய்களையும் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது. சிலவற்றின் குணாதிசயம், மனித இனத்தோடு ஒத்துப்போவதில்லை. அதன் மரபணுக்களை பொறுத்து அதன் குணாதிசயங்களும் மாறுகின்றன. சில நாய்களை வீட்டில் செல்ல பிராணிக்கு பதில் பாதுகாப்பாக வளர்க்கமுடியும்.
சில வகை நாய்களை விளையாட்டு போட்டிகள் மற்றும் தவறுகளை கண்டறியும் துப்பறியும் பணிகளுக்கு பயன்படுத்தமுடியும். லெப்ராடர், ஜெர்மன் ஷெப்பேர்டு, பீகல், புல்டாக், பாக்ஸர், பியர்�ட்கோலி, பக், சசெக்ஸ் ஸ்பேனி என ஒவ்வொரு நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் நாய் இனங்கள் உள்ளன. இந்தியாவில் ராஜபாளையம், கோம்பகன்னி, கோம்பை உள்ளிட்ட நாய் வகைகள் இந்தியாவில் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
தற்போது வெளிநாட்டு இனங்களை வளர்ப்பது அதிகரித்து வருகிறது. கிரேடன், புல்மேஸ்டேட், நெப்போலியன் மேஸ்டேட், கோல்டன் ஹைபேல், ஜெர்மன்ஷெப்பர்டு, ராட்வீலர், பாக்சர், டால்மேஷன், டாபர்மேன், பாக்சன், லேபர்டாப், ஜவ்ஜவ், டான்சண்ட், பேஷன்டவுன், திக்னேஷ், பொமரேனியன், பிஞ்சர் உள்ளிட்ட நாய் வகைகள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
செல்ல பிராணி என்றாலும் நாய் வளர்ப்பு என்பது ஒரு கலை. பாலூட்டிகளில் மிக அறிவார்ந்த பிராணி நாய் தான். அதன் குணாதிசயங்களை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப வளர்த்தால் போதும். அந்த ஜீவன் எல்லா வகையிலும் மனித இனத்திற்கு காலம் முழுவதும் துணையாக இருக்கக்கூடியவை.
குறைந்த உயரம் கொண்ட பிஞ்சர் நாய்
நாய் வகைகளில் பிஞ்சர் நாய்தான் மிக சிறிய உயரம் கொண்டது. இந்த வகை நாய் 6 இஞ்ச் முதல் 16 இஞ்ச் வரை வளரக்கூடியது. லாப்ரடார் இரண்டே கால் அடி உயரம் வளரும். நாய்களில் கிரேடன் வகை நாய் மிகவும் உயரம் கொண்டது. இவை மூன்றரை கால் அடி உயரம் வரை வளரும். ஒரு நாயின் ஆயுட்காலம் 18 ஆண்டுகளாகும்.
வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு 13 ஆண்டுகளும், தெருநாய்கள் 18 ஆண்டு வரை உயிர்வாழும். வளர்ந்த நாய் ஒரு நாளைக்கு மூன்று வேளையும், குட்டி நாய் 4 வேளையும் சாப்பிடும்

