இந்தியாவின் தேசிய கீதமானது இரவீந்திரநாத் தாகூர் அவர்களால், எழுதப்பட்டது. இதனை அவரே இசையமைத்துப் பாடியிருக்கிறார்.
1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதியன்று இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா மாநகரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்தான் முதன்முதலாக இது பாடப்பட்டது. அந்த மாநாட்டில் சில பள்ளிக்கூடப் பிள்ளைகளுடன் இப்பாடலைப் பாடியவர் சரளாதேவி என்பவர் ஆவார்.
இவர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் நெருங்கிய உறவுக்காரப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது இரவீந்திரநாத் தாகூர் தனது தாய்மொழியான வங்காள மொழியில்தான் இப்பாடலை எழுதினார். அங்கீகரிக்கப்பட்ட நமது தேசிய கீதத்தின் மொழிவடிவம் இந்தி மொழி வடிவமாகும். இப்பாடலை நமது தேசிய கீதமாக 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதியன்று அன்றைய இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தேசிய கீதத்தின் பொருள்
ஜன கன மன அதிநாயக ஜய ஹே :
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
பாரத பாக்ய விதாதா –
இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.
பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா
ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.
புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.
குஜராத் மாநிலம் உன்னுடையது .
வீர மராட்டிய மாநிலம் உன்னுடையது .
திராவிட பீடபூமி உன்னுடையது.
பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.
பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .
இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிக் கொண்டிருக்கின்றனர்.
விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
(வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் –) விந்திய மலை உன்னுடையது.
(மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட –) இமய மலைத்தொடர் உன்னுடையது.
(இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள்) இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.
இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

