நாடு முழுவதும் கொரோனா சூழ்நிலையால் பள்ளிகள்,
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மூடப்பட்டிருக்கின்றன. கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலையில், முழுப் பாடப்பகுதிகளை நடத்துவது என்பது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடப்பகுதிகள் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.
அதன்படி, கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாட திட்டத்தின் அடிப்படையிலேயே, இந்த ஆண்டும் பாடங்களை நடத்த வேண்டும் என்று அவரது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 50 முதல் 46 சதவீத பாடப்பகுதிகள் குறைக்கப்படுகின்றன. 9 முதல் 12ம் வகுப்பு வரை 35முதல் 38 சதவீத பாடப்பகுதிகள். குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட இருக்கும் நிலையில், மாணவர்களை மனதளவில் தயார் படுத்தும் வகையில் 45 முதல் 50 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

