“ஒரு பாடல் என்பது இன்று பூத்த மலர் போல இருக்க வேண்டும். பூத்த மலர் ஓரிரு நாளில் உதிர்ந்து விடும். ஆனால், பாடல் என்பது எப்போதும் மலராக, இளமையாக இருக்கும்.
அந்த பாடல் தான், மக்கள் மத்தியில் நிலைக்கும். ஆனால், என் பழைய பாடல்கள் இப்போது கேட்டாலும் புதுசாகவே இருக்கும். என் இசைப்பணி எப்போதும் போல, தொடர்ந்து கொண்டு இருக்கிறது. வெளிநாட்டில், பீத்தோவன் வாசித்த பியோனோ போன்ற வாத்திய கருவிகள் மற்றும் வீடு போன்றவற்றை அப்படியே பாதுகாத்து, பராமரிக்கின்றனர். இங்கு நம் இசைமேதைகளின் இசைக்கருவிகளை பாதுகாத்து வைத்துள்ளோமா; தியாகராஜா சுவாமிகள் தம்புரா எங்கே; முத்துசாமி தீட்சிதரின் வீணை எங்கே…
இதுகுறித்து, மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, விழா ஒன்றில் பேசியுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். நமக்கு அதன் மதிப்பு, மகத்துவம் தெரியவில்லை. பாரம்பரியத்தை பாதுகாப்பது போன்றதொரு விஷயத்தை செய்ய வேண்டும். என் இசையில் நான் பாடவேண்டும். வரும் தலைமுறை பின்பற்றும்படி, நான் நடந்து வருகிறேன். இசை மேதைகளுக்கு இங்கு சிலை வைக்கவில்லை என்பதை பார்க்கும் போது, நம் உணர்வு அப்படி இருக்கிறது அவ்வளவுதான். ரீமிக்ஸ் பாடல்களை எதிர்ப்பது என் வேலையல்ல. கேமராவில் என் முகத்தை காட்டக்கூடாது என, நினைக்கிறேன். என் இசையில் என்னை பார்க்கலாம்.
-இசையமைப்பாளர் இளையராஜா

