கடவுள் இருக்கிறாரா? இல்லையா? – இந்தக் கேள்விக்கு பதிலாக சிலரால் கூறப்படுவது ” கடவுள் இல்லை” – என்பதாகும். இப்படி கூறும் கருத்தானது நாத்திகம் என்றும், இப்படிக் கூறுவோர் “நாத்திகர்”என்றும், இந்த சித்தாந்தத்தை பின்பற்றுவோர் இதற்கு பெயர் “பகுத்தறிவு” என்றும் கற்பிக்கபித்துள்ளனர்..
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்கிற குறளின் அடிப்படையில்,
”எதனையும் பகுத்து, ஆய்வு செய்து, உணர்ந்து கொள்ளும் அல்லது புரிந்து கொள்ளும் திறன் “ என்பதாகும்.
உண்மையில் “பகுத்தறிவு” என்பது என்ன?
அப்படி என்றால் “அறிவு” என்பதன் பொருள்?
”நல்லது எவை?; கெட்டது எவை?” என பிரித்து, உண்மையை ஆராயும் தன்மை அல்லது சுருக்கமாகச் சொன்னால், “சுயமாக சிந்தித்து எது உண்மை என அறியும் ஆற்றல்” – இதுதான் அறிவு.
இதை ஆன்மீக உலகம் குறிப்பிடும் வார்த்தை “மெய்ஞானம்”
அறிவு உள்ளப்பூர்வமானது. ஆனால், அது காலச்சூழலால் மாறுபடக் கூடியது.
மெய்ஞானம் உணர்வுப்பூர்வமானது. ஆனால், அது என்றும் மாறாதது.
இத்தகைய மெய்ஞானத்தை போதிப்பதே மதங்களின் அடிப்படை நோக்கம்.
அநேகமாக நாத்திகராக அறியப்பட்டுள்ளவர்களில் முதன்மையானவராக “சாக்ரடீஸ்” இருந்திருக்கக் கூடும். அதற்கும் முன்னர் நாத்திக கருத்துக்களை போதித்தவர்கள் எவரேனும் இருந்தார்களா? என்று நான் அறிந்திருக்கவில்லை. அதனாலேயே நான் சொல்லும் கருத்துதான் சரியென்று கூறவில்லை. பிழையிருப்பின் பொறுத்தருள்க.
அந்த சாக்ரடீஸ் போதித்தது, அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை எதிர்த்து. அந்த காலகட்டத்தில் அது அவசியமான ஒன்று. காரணம், ஆள்பவரே ஆண்டவர் என்கிற சித்தாந்தம் அடித்தட்டு மக்களை அடிமைப்படுத்தியிருந்தது. மனிதனை மனிதனே கேவலப்படுத்தும் இந்த நிலையைப் போக்க வேண்டும். அதற்கு என்ன வழி?
அடித்தட்டு மக்களுக்கு சுய அறிவினை போதிப்பது. அதைத்தான் சாக்ரடீஸ் செய்திருக்கிறார். அனைவரும் சமமான உயிர்களே. அனைவருக்கும் இவ்வுலகில் சுதந்திரம் இருக்க வேண்டும். அனைவரும் நன்னிலையில் வாழ வழி செய்யப்பட வேண்டும். இதுதானே அவரின் நோக்கம். அதற்காக அவர் ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டினார்.

