Home செய்திகள் தூய்மை பணியாளர் பத்மாவை கௌரவித்த இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!

தூய்மை பணியாளர் பத்மாவை கௌரவித்த இராதாகிருஷ்ணன் பார்த்திபன்!

45 சவரன் தங்க நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த பத்மாவிற்கு புதிய காலணிகள் அணிவித்து காலில் விழுந்து ஆசி வாங்கி மாணவிகள் முன்னிலையில் புடவை வழங்கிய பார்த்திபன்

பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பத்மா, சமீபத்தில் தான் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்து உரியவர்களிடம் அவை சேர உதவி புரிந்தார்.

பத்மாவை தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மத்திய அரசு பத்மாவை கௌரவிக்கும் நோக்கில் தபால் தலையை வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்மாவை அவரது இல்லத்திற்கு வரவழைத்து தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் புதுமைகளின் புகலிடமாக விளங்கும் இயக்குநரும் நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தூய்மை பணியாளர் பத்மாவை எத்திராஜ் மகளிர் கல்லூரிக்கு அழைத்து சென்று கௌரவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்த நிலையில் விருந்தினராக நானும் சிறப்பு விருந்தினராக பத்மா அவர்களும் கலந்து கொண்டால் என்ன என்று தோன்றியது திருவல்லிக்கேணியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரை இந்த நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன். அதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்ட அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எத்திராஜ் கல்லூரியின் மாணவிகளுக்கு ஊக்கம் அளித்தார். தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த எளிய மனிதரான அவரது உயர்ந்த உள்ளத்தை பாராட்டும் வகையில் அவருக்கு புதிய காலணிகளையும், புடவையையும் வழங்கி அவரிடம் ஆசி பெற்றேன். இது ஒரு மகிழ்ச்சியான தருணமாக என்றென்றும் நினைவில் நிற்கும் ” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பத்மா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மேலும், சவாலான வேலையான தூய்மை பணியாளராக பணியாற்றும் பத்மா அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான அவரது கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

சென்னை திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா, தூய்மைப் பணியாளர். இவர் தி.நகரில், கடந்த மாதம் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கிடந்த பையை எடுத்துப் பார்த்துள்ளார்.

அதில், 45 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. உடனடியாக, நகையை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். விசாரணையில், அந்த நகைகள் நங்கநல்லூரை சேர்ந்த பரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்த நிலையில் நகைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பத்மாவை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version