ஒருமுறை அமுதத்தை எடுக்க வேண்டி பாற்கடலைக் கடைய வேண்டி இருந்தது. திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஒரு ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.
இழுவையின் வேதனை தாங்காமல் வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. அந்த விஷநெடியானது அனைவரையும் மூர்ச்சையாக்க வல்லது.
ஆகவே முப்பத்து முக்கோடி தேவர்களும், “சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்”என மன்றாடினர். உடனே சிவன் ‘விஷாபகரண மூர்த்தி’யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார்.
அந்த விஷமானது சிவனின் தொண்டைக்குள் செல்லும் போதே, பயந்துபோன மனைவி பார்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கண்டம் எனப்படும் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது.
இதனாலேயே சிவன் “நீலகண்டன்’ ஆனார். விஷத்தை தடுத்து அனைவருக்கும் அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் “அமுதாம்பிகை’ ஆனாள்.
இந்நிகழ்ச்சிக்குப்பிறகு பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் செல்லும்வழியில் ஓரிடத்தில் தங்கி இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது. அந்த புண்ணியத்தலமே இன்றைய ஆந்திர மாநிலத்தில் உல்ள சுருட்டப்பள்ளி எனும் ஊராகும்.
இங்குள்ள சிவாலயமே பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயிலாகும். இங்கே பார்வதியின் மடியில் சிவன் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம். சிவன் பள்ளி கொண்ட ஈஸ்வரன் என்கிற பெயருடன் மனைவி சர்வ மங்களாம்பிகை,
மரகதாம்பிகை எனும் பெயருடைய மனைவியுடன் வால்மீகிஸ்வரர். மனைவியரான சித்தி, புத்தியுடன் விநாயகர் பூரணி, புஷ்கலை ஆகிய தன் மனைவியருடன் சாஸ்தா எனப்படும் ஐயனார். தன் மனைவி கவுரிதேவியுடன் குபேரன் தன் மனைவி தாராவுடன் தட்சிணாமூர்த்தி இவர்களுடன் சங்கநிதி மற்றும் பதுமநிதி ஆகியோரும் தம்பதி சமேதராக இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
மூலவர் திருப்பெயர் வால்மீகிஸ்வரர் .
திருமாலைப்போலவே பரமேஸ்வரன் பள்ளிகொண்ட ஒரே கோவில் இதுதான் என்பது சிறப்பாகும். இன்று பெருவாரியான மக்களை வசீகரித்திருக்கும் பிரதோஷ வழிபாடு முதன் முதலில் இந்த ஆலயத்தில் தான், நடத்தப்பட்டதாகவும், அதன்பிறகே மற்ற சிவ ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு தொடங்கியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. இத்தலத்தில் இருக்கும் அம்பிகையின் பெயர் மரகதாம்பிகை. முதலில் மரகதாம்பிகையை வழிபட்ட பின்னரே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
இத்திருக்கோயிலில் சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர்,
பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஓம் நமசிவாய

