ஸ்டார்ட்..ஆக்ஷன்.
அத்தியாயம் 51.
இயக்குனர்.பாரதி ராஜா.
கிழக்கே போகும் ரயில்!.. பெயரிலேயே வித்தியாசத்தை சுமந்து …. வெற்றி பயணம் செய்த பாரதிராஜா அவர்களின் இரண்டாவது படம்..!
கவித்துவமான காதல் கதை.!
ஒரு காதலுக்கு தூது போக பல வழிகள்…உண்டு..
பறவைகள் மூலமாக … கடிதங்கள் மூலமாக … நண்பர்கள் மூலமாக … தூது போகும் சம்பவம் நடப்பதுண்டு!
ஆனால் இந்தப் படத்தில்.. காதலுக்கு ஒரு ரயில் தூது போனது!..
ஜாதி மாறி உருவாகிய காதல்! ஜாதி வெறியில் மூழ்கிக் கிடக்கும் கிராமத்து மக்களை எதிர்த்து அந்த காதல் எப்படி ஜெயிக்கிறது என்ற ஆர் செல்வராஜ் அவர்களின் கதை வசனத்திற்கு …திரைக்கதை எழுதி இயக்கி இருந்தார் பாரதிராஜா அவர்கள்!
தன் முதல் படத்தில் பெரிய நடிகர்களை வைத்து இயக்கிய அவர் இந்தப் படத்தில் புது முகங்களை பிரதான பாத்திரங்களில் நடிக்க வைத்தார்! சுதாகர் அவர்கள் ஹீரோவாக அறிமுகமானார்!
எம்.ஆர்.ராதா அவர்களின் மகள் ராதிகா அவர்கள் அறிமுகம் ஆகிய முதல் படம்…‘கிழக்கே போகும் ரயில்’
மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்ந்து.. ஆங்கிலம் மட்டுமே சரளமாக பேசிக் கொண்டு இருந்த ராதிகா அவர்களை ஒரு கிராமத்து பெண்ணாக உரு மாற்றி …. வட்டார தமிழ் மொழி பேசி நடிக்க வைத்தார்!..
இன்றைக்கும் பல மொழிகளில் நடிக்கும் ஒரு சிறந்த நடிகையாக உச்சத்தில் வாழ்ந்து வருகிறார் ராதிகா அவர்கள்!
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வேறு வகையில் முதலில் எழுதப் பட்டிருந்தது! அதை படமாக்க யூனிட்டும் நடிகர் நடிகைகளும் வெளியூர் செல்ல தயாரான நேரத்தில் …. கதாசிரியர் ஆர்.செல்வராஜ் அவர்களுக்கு புது கிளைமாக்ஸ் மனதில் உருவானது!
அடை மழையை பிரதானமாக்கி… அந்த மழையை நிறுத்த… கொடூரமான சடங்கை பின்பற்றும் கிராமத்து மக்களின் மூட நம்பிக்கையை மையப் படுத்தி அதில் சிக்கிக் கொள்ளும் கதாநாயகி எப்படி நாயகனால் காப்பாற்றப் படுகிறார்?.. எப்படி அவர்கள் கிழக்கே போகும் ரயிலில்…ஏறி..வெறி பிடித்த மக்களிடமிருந்து தங்கள் உயிரையும் காதலையும் காப்பாற்றிக் கொண்டு தப்பிச் செல்கிறார்கள்?.. என்ற கிளைமேக்ஸ் காட்சிகள் அவருக்கு
உதயமானது!
அந்த கிளைமாக்ஸ் காட்சிகளை
ஆர். செல்வராஜ் அவர்கள் பாரதிராஜா அவர்களிடம் சொன்னதும் அவர் வெகுவாக பாராட்டி ஊருக்கு கிளம்பிய அனைவரையும் தடுத்து நிறுத்தி விட்டு கிளைமாக்ஸ் படப் பிடிப்பை ஒத்தி வைத்து விட்டு..
கிளைமேக்ஸ்.. காட்சிகளை முறைப்படி விவாதித்து.. மாற்றி அமைத்துக் கொண்டு… அதற்குப் பிறகு படப் பிடிப்பை நடத்தினார்!.
திரைப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு கிளைமாக்ஸ் காட்சிகள் மிகப் பெரிய பலமாக அமைந்தன!..
‘மாஞ்சோலை கிளிதானோ’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது!
அதை பாடிய ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னணி பாடகராக உருவானார்!
1978 இல் வெளியான …
‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படம் வெள்ளி விழா கண்டது …!
இரண்டாவது படமும் மாபெரும் வெற்றி பெற்றதால்..
பாரதிராஜா அவர்கள் Hat-trick வெற்றி பெறுவாரா?: என்று எதிர்பார்ப்பு திரையுலகில் உருவானது!
அத்தோடு இன்னொரு சவாலும் எழுந்தது..!
கிராமத்து கதைகளை இயக்க மட்டுமே பாரதி ராஜா அவர்களால் முடியும்… நகர்ப் புற படங்களை எடுக்க அவரால் முடியுமா? என்ற இன்னொரு விமர்சனமும் எழுந்தது!
இந்த இரண்டு சவால்களுக்கும் அவரது மூன்றாவது படம் விடை தந்ததா?
அவர் Hat trick வெற்றி பெற்றாரா?
(தொடரும்)
– இயக்குநர் நித்தியானந்தம்

