திருச்சி கிருஷ்ணமூர்த்தி நகரில் 6 வயது சிறுமியை நாய் கடித்து குதறியதால், அச்சிறுமியின் குடும்பத்தார் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.
திருச்சி கே.கே.நகர் செல்லும் வழியில் சிம்கோமீட்டர் அருகே கிருஷ்ணமூர்த்தி நகர் உள்ளது.
திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்குட்பட்ட இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக நாய் தொல்லை அதிகரித்து வருகிறது.
மாநகராட்சி பணியாளர்கள நாய்களை பிடித்துச் செல்லவதுமில்லை, தடுப்பூசியும் செலுத்துவதில்லை என அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் வசிக்கும் இனியா என்ற 6 வயது சிறுமி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்திருந்தபோது அங்கு வந்த நான்கைந்து நாய்கள் சிறுமி இனியாவை கடித்துக்குதறி உள்ளன.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த பொதுமக்கள் நாய்களை அடித்து துரத்துவதற்குள் பெரும் பாடுபட்டுள்ளனர்.
இதேபோல கடந்த 6 மாதங்களுக்குள் 10க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் நாய் கடிக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் இச்சம்பவத்துக்கு பின் இனியாவின் குடும்பத்தார் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி நடுங்குகின்றனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்து வேறு எங்காவது விட வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

