முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்? பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே! செந்தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே.! பாடல்
விளக்கம்: அருமையான அமுதமே! எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடுவும் முடிவும் ஆனவனே! மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்; வேறு யாவர் அறியக்கூடியவர்.
பந்தை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும் நீயுமாக உன்னுடைய அடியார்களுடைய பழைய சிறு வீடுதோறும் எழுந்தருளின மேலானவனே! சிவந்த நெருப்பை ஒத்த வடிவத்தையும் காட்டித் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டி, அழகிய தண்ணிய அருளாளன் ஆதலையும் காட்டி வந்து ஆட்கொண்டவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

