தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் காற்றுடன், மழை பெய்ய வாய்ப்பு
'தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், இன்று பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகம் உள்ளிட்ட தென்மாநில பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இடி,
மின்னலுடன், மணிக்கு, 40 கி.மீ., வரையிலான வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வரும், 24ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக, வெப்பம் பதிவாகலாம். வெப்பம் அதிகரிப்பு காரணமாக, பகல் நேரத்தில் வெளியில் செல்வோருக்கு, அசவுகரியம் ஏற்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
4 இடங்களில் சதம் நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலையம் பகுதியில், 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 39.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.