தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை பகுதியில் அதிகபட்சமாக 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடனா அணை, 13; திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, 12; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, 11; திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, 10; கன்னியாகுமரி மாவட்டம் அணைகெடங்கு, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் தலா, 9; கன்னியாகுமரி மாம்பழதுறையாறு, திருநெல்வேலி மாஞ்சோலை தலா, 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதனால் 9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் நிலவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.