“தாம்பரம் குளக்கரை விநாயகர்”
மு.பழனிவாசன்
சென்னையில் தாம்பரம் ரயில்வே சந்திப்பிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமந்திருப்பது “குளக்கரை பிள்ளையார் திருக்கோயில்”. ஆனால், இவருக்கு பூர்வாசிரமப்பெயர் “அரசரடி விநாயகர்”, அரசமரத்தடியில் இவர் எழுந்தருளியிருப்பினும் அழகான குளத்தில் ஓரு ஓரத்தில் இருப்பதால் இவர் “குளக்கரை விநாயகர்” என்றே பிரசித்தி பெற்றிருக்கிறார்.
பிரமாண்டமான குளத்தின் மீது பல காங்கிரீட் தூண்களின் மேல் இத்திருக்கோயில் அமைந்திருப்பது கண்கொள்ளா காட்சி. மொத்தத்தில் எழில்மிகு தோற்றம்! கிழக்கு பார்த்த வண்ணம் குடிகொண்டிருக்கும் விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். எளிமையான ஆனால் அழகான திருக்கோயில். விநாயகர் சந்நிதியின் கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தெட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை போன்ற தெய்வங்களும் எழுந்தருள்கிறார்கள். இவர்கள் மட்டுமா? தனி சந்நிதானத்தில் வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் கிழக்கு நோக்கி கம்பீரமாக விளங்குகிறார். இவர் மட்டுமா? பிரகாரத்தில் தெற்கு நோக்கி காலதேவி கங்கையம்மன் கம்பீபரமாக காட்சி தருகிறாள்.

வெகு சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோயிலுக்கு அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒன்று. இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், பக்தர்களின் உணர்விற்கு மதிப்பு கொடுக்கும் ஆலய நிர்வாகமும், அதன் அர்ச்சகர்களும், ஊழியர்களும் தான்! கெடுபிடிகள் ஏதும் கிடையாது. ஆத்மார்த்தமாக பூஜை நடைபெறும் இத்திருக்கோயிலில் நடைபெறும் மந்திர உச்சாடனங்கள் பக்தர்களின் வாழ்வில் ஆகச்சிறந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதில் முக்கியமான ஒன்று இங்கே நவக்கிரஹங்களுக்கு தனி சந்நிதி அமைப்பு கிடையாது.
மூன்று பக்கமும் நீராலும், ஒரு பக்கம் சாலையாலும், சூழப்பட்டு, அருகாமையில் சலசலக்கும் அரச மரத்தடியும் கொண்டிருக்கும் அமைப்பானது, புத்தெழுச்சியூட்டுகிறது. அவசர, அவசரமான எந்திரத்தனத்தில் நாளெல்லாம், பொழுதெல்லாம் நச்சரிப்பிலேயே நசுக்கப்படும் நம் வாழ்வியலில் நயமான அமைதியும், நல்வாழ்க்கையும் அரசரடி விநாயகர் திருக்கோயிலில் வழிபாடு செய்வதால் கிட்டும் என்பது நிச்சயம்.
இத்திருக்கோயிலுக்குச் செல்ல எந்த ஒரு சிரம்மும் இல்லை. தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து முடிச்சூர் செல்லும் பாதையில் ஷேர் ஆட்டோ, இரு சக்கர வாகன்ம், கார் மூலம் பயணித்தால் சாலையின் வலதுபுறத்தில் கோயில் அமைந்துள்ளது.
அனைவருக்கும் விநாயகர் அருள் கிடைக்கட்டும்.
மு.பழனிவாசன்

