Home செய்திகள் இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடக்கம்!

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடக்கம்!

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முற்றிலும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமாக, பொதுமக்கள் தங்களின் விவரங்களைத் தாங்களாகவே இணைய வழியில் பதிவு செய்யும் ‘சுய கணக்கெடுப்பு’ (Self-Enumeration) நடைமுறை தமிழகத்தில் இன்று (ஜூலை 17, 2026) முறைப்படி தொடங்கியுள்ளது.

இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் (https://se.census.gov.in) பொதுமக்கள் தங்களின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைந்து, வீட்டின் தரம், குடிநீர், சுகாதாரம், மின்சாரம் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட 33 கேள்விகள் அடங்கிய படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

இம்மாதம் 31-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் இந்த ஆன்லைன் பதிவை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் ஒரு தனித்துவமான 11 இலக்க அடையாள எண் (Self-Enumeration ID) வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பாளர்கள் செல்போன் செயலியுடன் வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் களப்பணியை மேற்கொள்ளும்போது, ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் தங்களின் அடையாள எண்ணைக் காட்டினால் போதுமானது, அவர்களின் விவரங்கள் நேரடியாகச் சரிபார்க்கப்படும்.

இந்த சுய கணக்கெடுப்பு முறை கட்டாயமில்லை என்றாலும், பொதுமக்கள் தங்களின் விவரங்களைத் துல்லியமாகப் பதிவிட இது ஒரு எளிய வாய்ப்பாக அமைவதோடு, நேரடியாக வீடுகளுக்கு வரும் அதிகாரிகளின் பணிச்சுமையையும் நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும் என்பதால் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Exit mobile version