தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் இடம் மன்னவனூர் கிராமம் தமிழ்நாடு போலவே இருக்காது. ஏதோ சுவிட்சர்லாந்துக்கு வந்துவிட்டது போல் அருமையான சூழலில் காணப்படும். கொடைக்கானலில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மன்னவனூர் கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,880 மீட்டர் (6,168 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆட்டுப்பண்ணை உலகப் புகழ் பெற்றது.
கொடைக்கானலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு தினசரி உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இவை குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் டாக்ஸிகள், கேப்கள் என நம் வசதிக்கு ஏற்றபடி எடுத்துக் கொள்ளலாம். இந்த கிராமத்தில் சில அடிப்படை வசதிகளுடன் தங்கும் விடுதிகளும் உள்ளன. அங்கு தங்கியும் சுற்றிப் பார்க்கலாம் அல்லது பகலில் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கொடைக்கானலுக்கு திரும்பி விடலாம்.
மன்னவனூர் கிராமம் தமிழ்நாட்டின் வனத்துறைக்கு உட்பட்ட நிலப்பரப்பாகும். இங்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் அமைந்துள்ளது, முயல் மற்றும் செம்மறியாடு ஆராய்ச்சி பண்ணைகளும் உள்ளன. பசுமையான புல்வெளிகள் இங்கு காணப்படும்.
இங்கு புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
முயல் பண்ணையில் பல்வேறு அரிய வகை முயல்களின் இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலையத்தில் சுத்தமான நீலகிரி தைலம், முயல் ரத்த கூந்தல் தைலம், மூட்டு வலி தைலம் ஆகியவை தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
இங்குள்ள அழகிய புல்வெளி பள்ளத்தாக்குகளில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதையும், சில காட்டு விலங்குகளையும் காணலாம். பண்ணையிலிருந்து பத்து நிமிட தொலைவில் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளது, அழகிய ஏரியின் கரையில் அமைந்துள்ளது.
இங்கு ஜிப்லைன், காயக்கிங், பரிசல் பயணம் என்பன உள்ளன. மேலும், குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பெரிய சிறுவர் பூங்கா உள்ளது.
உணவு அருந்துவதற்கு பல துரித உணவு கடைகளும் டீ ஷாப்களும் உள்ளன. இந்த பகுதியில் ஒரு அழகான நீர்த்தேக்கம் உள்ளது, அதன் நீரோடையின் அழகை நாம் ரசிக்கலாம். சாகச விளையாட்டுக்கான தனியார் கட்டடங்கள் உள்ளன, இங்கு குதிரை சவாரி வசதியும் உள்ளது. இந்த இடத்தில் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை கழிக்கலாம்.
