ஆண்டுதோறும் வரத்தொடங்கும் வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டும் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என்பதால் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா. இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் இணைந்து செயலாற்ற உள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியா்களுடன் இன்று விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய்பேரிடர் துறை முதன்மை செயலாளர், அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை தொடரும் என்பதால் அதற்கேற்ப முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்

