தமிழகச் சட்டமன்றத்தில் இன்று காலை முதலமைச்சர் விஜய் 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் வரப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என 6 மணி நேரமாகக் குறைக்க அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது 10 மணி நேரமாக இருக்கும் இந்த விற்பனை நேரத்தை மக்களின் நலன் கருதி குறைக்கலாமா என்பது குறித்துத் தீவிர யோசனையில் முதலமைச்சர் இருப்பதாகத் தெரிகிறது.
அதே சமயம், டாஸ்மாக் விநியோக முறையைத் தனியார் வசம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆலோசனைகள் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் நிர்வாகச் சீர்கேடுகளைக் குறைத்து, மது விற்பனையை ஒரு முறைப்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் கொண்டு வர முதலமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
மதுவிலக்கை நோக்கிப் படிப்படியாக முன்னேறும் நோக்கில், நேரக் குறைப்பு மற்றும் விநியோக முறை மாற்றம் ஆகிய இரண்டுமே தவெக அரசின் முக்கிய நகர்வுகளாகப் பார்க்கப்படுகின்றன.

