Thursday, March 12, 2026
HomeUncategorizedதிருவெம்பாவை-பாடல் 16

திருவெம்பாவை-பாடல் 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு

முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

பொருள் : 
இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.

விளக்கம் : 
ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல். நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாகி குளிர்ந்து மழையாகிறது என்ற அறிவியல் கருத்தை மாணிக்கவாசகர் 1200 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். மேலும், இயற்கையை தெய்வமாக வடித்ததன் மூலம், அதற்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை தெளிவாகச் சொல்லிவிட்டார். இன்று இயற்கையை மதிக்காததன் விளைவை கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இனியேனும், இயற்கையை மதிப்போமா!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments