வயோதிகம் பெரும்பாலான முதியவர்களை குழந்தைகளாக மாற்றிவிடுகிறது. வயது அதிகரிப்பதால் முதியவர்களுக்கு மூளையின் ஆற்றல் குறைகிறது. எழுபது வயதிற்கு மேல் மூளையின் புறணியானது சுருங்கத் தொடங்குவதால், முதியவர்கள் தங்களது ஞாபக சக்தியையும் சிந்திக்கும் திறனையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றனர்.
அதாவது மறதி நோயான அல்சீமர் எனப்படும் நினைவுத் திறன் குறைபாடு நோய்க்கு உலகம் முழுவதும் 18 முதல் 19 மில்லியன் நோயாளிகள் நினைவுத்திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்சீமர் நோய் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலோனோருக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 21 ம் நாள் உலக அல்சீமர் தினமாக உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 ல் ஒருவரும், 80 வயதை எட்டியவர்களில் 5ல் ஒருவரும் அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்களை விட பெண்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறார் ஏசியன் இன்ஸ்டிடிடுயூட் ஆப் மெடிகல் சயின்ஸ்சின் நரம்பியல் பிரிவு தலைவர் நஜீப் ரஹ்மான். 2010 ம் ஆண்டு நாடுமுழுவதும் நினைவுத் திறன் குறைபாடு நோய்க்கு 3.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இது 2030 ம் ஆண்டு இரட்டிப்பாகும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
அல்சீமரை எப்படி தடுக்கலாம்? உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் உள்ள சத்தான கொழுப்புகளும்,காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். வயதானபின்னர் மறதிநோயினால் தாக்கப்பட்டவர்கள் குழந்தைகளைப் போல மாறிவிடுகின்றனர்.
அவர்களை ஒதுக்காமல் அன்பாய் அரவணைத்தாலே அவர்களின் நோய் பாதி குறைந்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்

