Friday, June 5, 2026
HomeUncategorizedமின்வாரிய அலுவலகத்தில் மர்ம திருட்டு..ரகசிய டெண்டர் ஆவணங்கள் மாயம்!

மின்வாரிய அலுவலகத்தில் மர்ம திருட்டு..ரகசிய டெண்டர் ஆவணங்கள் மாயம்!

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமை அலுவலகத்தில், டெண்டர்கள், கொள்முதல் மற்றும் நிலுவையில் உள்ள விசாரணைகள் தொடர்பான மிக முக்கியமான ரகசியத் தரவுகள் அடங்கிய சுமார் 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் (Hard Disks) மர்மமான முறையில் திருடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய மின்சாரத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் இந்தத் துறைக்கு நேரில் வந்து தவறு செய்பவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரித்துச் சென்ற சில நாட்களிலேயே, ஊழியர்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் வார இறுதி நாளான மே 16-17 ஆகிய தேதிகளில் இந்தத் துணிச்சலான சதிவேலை அரங்கேறியுள்ளது; குறிப்பாக, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் விபரங்களைக் குறிவைத்தே இத்திருட்டு நடந்துள்ள நிலையில், இதற்கான காகித ஆவணங்கள் இருந்தாலும் முக்கிய மென்பதிப்புகள் (Soft Copies) அனைத்தும் திருடப்பட்டுள்ளன.

மே 30-ஆம் தேதியன்று ஊழியர்கள் தங்களின் கணினிகளில் திட்டக் கோப்புகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சோதித்தபோதுதான், ஹார்ட் டிஸ்க்குகள் கழற்றப்பட்டுத் திருடப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருந்தாலும், நிதித்துறை உள்ளிட்ட சில பிரிவுகள் தலைமை அலுவலகத்திற்கோ அல்லது லஞ்ச ஒழிப்புத் துறைக்கோ இதைப் புகாரளிக்கத் தயங்கியதால், 8 உதவிப் பொறியாளர்கள் மற்றும் பிரிவு அதிகாரிகள் மூலமாக 8 ஹார்ட் டிஸ்க்குகளுக்கு மட்டுமே துறைரீதியான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தலைமை அலுவலகத்தின் 4, 5, 7 மற்றும் 10 ஆகிய உணர்திறன் மிக்க தளங்களில் உள்ள அலுவலகங்களில் இருந்து இவை திருடப்பட்டுள்ளதால், கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆயுஷ் மணி திவாரி தலைமையிலான மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஒரு தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கியது; தற்போது சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 305-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து, திருவல்லிக்கேணி துணை ஆணையர் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த உணர்திறன் மிக்க பிரிவுகளில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராக்கள், முறைகேடான ஒப்பந்தங்களை முடித்துக் கொடுக்கும் இடைத்தரகர்களின் பதிவுகள் சிக்காமல் இருப்பதற்காகவே திட்டமிட்டு அகற்றப்பட்டதாகவும், அதிக செலவு என்ற காரணத்தைக் காட்டி புதிய கேமராக்கள் பொருத்தக் கட்டிடக் கண்காணிப்புப் பொறியாளர் முட்டுக்கட்டை போட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

டான்ஜெட்கோ (Tangedco) நிறுவனத்தில் நடந்து வரும் டெண்டர் முறைகேடு விசாரணைகளுக்கு மத்தியிலேயே இந்தத் திருட்டு நடந்துள்ளது; கடந்த வாரம் தான் 297 கோடி ரூபாய் டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றியிருந்ததும், அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய முகமைகள் 2021 முதல் 2023 வரை வழங்கப்பட்ட மின்சாரத் துறை டெண்டர்களின் பணப் பரிவர்த்தனைகளை ஏற்கனவே ஆய்வு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments