குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் வியாழன்கிழமை மதியம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விமான நிலையத்தின் அருகில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

தீப்பிடித்த விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரை தவிர மற்ற அனைவருமே உடல் கருகி உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விமானத்திலிருந்து குதித்து உயிர் தப்பிய விசுவாஸ். அமர்ந்திருந்த 11 ஏ சீட்டு தான் தற்போது ட்ரெண்டாக பேசப்பட்டு வருகின்றது. ஐரோப்பிய நாடுகளில் இந்த இருக்கையை தான் ராசி இல்லாத இருக்க என பயணிகள் கருதுவதாகவும் கூறப்படுகின்றது..

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்1998இல் தாய்லாந்து விமான விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில், தான் 11A இருக்கையில் இருந்து குதித்து உயிர் தப்பியதை நினைவுகூர்ந்து உள்ளார் தாய்லாந்து பாடகர் ருவாங்சாக் லோய்ச் சுசாக். தன்னைப்போல் விஸ்வாஸும் 11A இருக்கையில் பயணித்து உயிர் பிழைத்ததை கேட்டு புல்லரித்ததாக அவர் கூறியுள்ளார். இருவரின் புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் 11A இருக்கையின் பிளைட் மாடல் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.




