Home Uncategorized 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 12 பேர் விடுதலை!

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 12 பேர் விடுதலை!

2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் விடுவிக்கப்பட்டனர். மும்பை ரயில் குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 200 பேர் இறந்தனர். மேலும், 700 பேர் காயமடைந்தனர். இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் 12 பேரை குற்றவாளிகள் என அறிவித்திருந்தது.

2015ஆம் ஆண்டில், இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் குற்றவாளி என அறிவித்தது. அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இது தொடர்ந்து மேல் முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை நீதிபதி அனில் கிலோர் மற்றும் நீதிபதி ஷியாம் சந்தக் அமர்வு விசாரித்து வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றத்தை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் குற்றத்தைச் செய்தார்கள் என்பதை நம்பும்படி இல்லை.. எனவே, அவர்கள் மீதான தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வேறு வழக்குகளில் தொடர்பில்லை என்றால் அவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எஹ்தேஷாம் மற்றும் நவீத் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. முகமது சஜித் அன்சாரி, முகமது அலி, டாக்டர் தன்வீர் அன்சாரி, மஜித் ஷாஃபி, முஸம்மில் ஷேக், சோஹைல் ஷேக் மற்றும் ஜமீர் ஷேக் ஆகிய ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமன்றி நிரூபிக்கப்படாததால் உயர் நீதிமன்றம் இந்த 12 பேரையும் விடுவித்துள்ளது. 19 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

Exit mobile version